'விப்' உத்தரவில் நீதிமன்றம் தலையிடுவதா.. காங்கிரஸ் தலைவர்கள் அதிருப்தி
பெங்களூர்: கர்நாடக அதிருப்தி எம்எல்ஏக்கள் வழக்கில், உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு குறித்து காங்கிரஸ் தலைவர்கள் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
அதிருப்தி எம்எல்ஏக்கள் சட்டசபைக்கு வந்தே தீர வேண்டும் என யாரும் கட்டாயப்படுத்த முடியாது என உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளதுதான், இந்த அதிருப்திகளுக்கு காரணம். நாளை குமாரசாமி அரசு நம்பிக்கை வாக்கெடுப்பு கோர உள்ள நிலையில், விப் உத்தரவு மூலமாக 16 அதிருப்தி எம்எல்ஏக்களையும் தங்கள் பக்கம் தக்க வைக்க முடியும் என காங்கிரஸ், மஜத நினைத்திருந்தது. ஆனால், உச்சநீதிமன்ற உத்தரவால், நம்பிக்கை வாக்கெடுப்பின்போது, அரசு கவிழும் சூழ்நிலை உருவாகியுள்ளது.
காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜேவாலா, கூறுகையில்"அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்வது தொடர்பான சுப்ரீம் கோர்ட் உத்தரவு ஒரு வித்தியாசமான நடைமுறையாக உள்ளது. சித்தாந்தத்தால் அல்லாமல், வேறு காரணத்தால் இயக்கப்படும் எம்.எல்.ஏ.க்களுக்கு சட்டப் பாதுகாப்பு என்பது கேள்விப்படாதது" என்றுள்ளார். விப் உத்தரவை எப்போது நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதை தீர்மானிப்பதன் மூலம் மாநில சட்டமன்றத்தின் செயல்பாட்டில் நீதிமன்றம் எவ்வாறு தலையிட முடியும்? அதிகாரங்கள் பிரிக்கப்பட்டுள்ளது என்றும் சுர்ஜேவாலா தெரிவித்துள்ளார்.
நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு.. கர்நாடக அரசை காப்பாற்ற இப்போது கூட 2 அஸ்திரம் உள்ளது! மாஸ் பிளான்
கர்நாடக காங்கிரஸ் கட்சியின் தலைவர் தினேஷ் குண்டுராவ் கூறுகையில், அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் விப் உத்தரவை மீறுவதற்கு உச்ச நீதிமன்ற உத்தரவு வழியமைத்துள்ளதாக தெரிகிறது. அரசியலமைப்பின் 10 வது அட்டவணையின்படி கொறடா உத்தரவுக்கு கொடுக்கப்பட்ட அதிகாரம் இப்போது கேள்விக்குறியாகியுள்ளது, என்பதால் இது ஒரு தவறான முன்னுதாரணம். உண்மையில் ஒரு அசாதாரண உத்தரவு. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.