பெங்களூரில் தொடங்கியது காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம்.. பங்கேற்காதவர்கள் மீது பாய்கிறது நடவடிக்கை?
Recommended Video
பெங்களூர்: கர்நாடக அரசியலில் பரபரப்பு உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏக்கள் கூட்டம் பெங்களூரில் தொடங்கி நடைபெற்று வருகிறது.
காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 10 எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்துள்ள நிலையில், அக்கட்சியின் சட்டசபை குழு தலைவரும், முன்னாள் முதல்வருமான சித்தராமையா பெங்களூரு தலைமைச் செயலகமான விதான சவுதாவில் இன்று காங்கிரஸ் எம்எல்ஏக்களின் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தார்.
இந்த கூட்டத்தில் அனைத்து எம்எல்ஏக்களும் பங்கேற்க வேண்டும், பங்கேற்காதவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் அறிவித்திருந்தார். இந்த நிலையில் இன்று காலை சுமார் 10.30 மணி அளவில் எம்எல்ஏக்கள் கூட்டம் சித்தராமையா தலைமையில் தொடங்கி நடைபெற்று வருகிறது.
Karnataka: Congress's CLP meeting underway at Vidhana Soudha in Bengaluru. pic.twitter.com/6pYHnTMCZV
— ANI (@ANI) July 9, 2019
இதில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம்எல்ஏக்கள் ஒவ்வொருவராக வந்து பங்கேற்ற வண்ணம் உள்ளனர். ராஜினாமா செய்துவிட்டு மும்பை ஹோட்டலில் தங்கியுள்ள எம்எல்ஏக்கள் இதில் பங்கேற்க வருகை தருவார்களா, ஒருவேளை அப்படி வருகை தராவிட்டால் அவர்கள் மீது நடவடிக்கை பாயுமா என்ற கேள்விகள் எழுந்து உள்ளதால் இந்த கூட்டம் மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது.
அதிருப்தி எம்எல்ஏக்களுக்கு அமைச்சர் பதவியை வழங்கும் வகையில், காங்கிரஸ், மஜத அமைச்சர்கள் கூண்டோடு ராஜினாமா செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.