கர்நாடகாவில் ரெசார்ட்டில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் இடையே மோதல்?.. ஒருவர் மருத்துவமனையில் அனுமதி
கர்நாடகாவில் சொகுசு ஹோட்டலில் இருந்த காங்கிரஸ் எம்எல்ஏ ஆனந்த் சிங் திடீரென்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பெங்களூர்: கர்நாடகாவில் சொகுசு ஹோட்டலில் இருந்த காங்கிரஸ் எம்எல்ஏ ஆனந்த் சிங் திடீரென்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அந்த ஹோட்டலில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் இடையே சண்டை நடப்பதாக தகவல்கள் வருகிறது.
கர்நாடகாவில் மதசார்பற்ற ஜனதா தளம் - காங்கிரஸ் கூட்டணி ஆட்சி செய்து வருகிறது. கடந்த 7 மாதமாக இந்த கூட்டணி ஆட்சி செய்து வருகிறது.
இந்த ஆட்சியை கவிழ்ப்பதற்காக முயற்சிகள் நடந்து வருவதாக தகவல்கள் வருகிறது. அங்கு காங்கிரஸ் எம்எல்ஏக்கள் தனியார் விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
தங்கி உள்ளனர்
தற்போது அங்கு இருக்கும் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் எல்லோரும் ஈகிள்டன் என்ற தனியார் விடுதியில் தங்க வைக்கப்பட்டு இருக்கிறார்கள். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 77 எம்எல்ஏக்கள் ஹோட்டலில் இருக்கிறார்கள். 80 பேரில் 3 பேர் மட்டுமே ஹோட்டலுக்கு வரவில்லை.
பிரச்சனை ஏற்பட்டதாக தகவல்
இந்த நிலையில் அங்கு காங்கிரஸ் எம்எல்ஏக்களுக்கு இடையே பிரச்சனை ஏற்பட்டதாக செய்திகள் வெளியாகி வருகிறது. காங்கிரஸ் எம்எல்ஏக்கள் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதாகவும். அதில் பலர் தாக்குதலுக்கு உள்ளதாகவும் தகவல்கள் வருகிறது. இது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மருத்துவமனையில் அனுமதி
இந்த நிலையில் தற்போது காங்கிரஸ் எம்எல்ஏ ஆனந்த் சிங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவர் பெங்களூர் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவர், காங்கிரஸ் எம்எல்ஏ ஜெ.என் கணேஷ் தாக்கி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஜெ.என் கணேஷ் ஆனந்த் சிங்கை பாட்டிலால் தாக்கியதாக கூறப்படுகிறது.
காங்கிரஸ்
காங்கிரஸ் இந்த செய்திக்கு மறுப்பு தெரிவித்துள்ளது. ஆனந்த் சிங் நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்கிறார்கள். இதில் ஆளுநர் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாஜக கோரிக்கை வைத்துள்ளது.