பெயிலியர் ஆன ஆபரேஷன் லோட்டஸ்.. பெங்களூருவில் இன்று காங். எம்எல்ஏக்கள் கூட்டம்
பெங்களூரு:பெரும் அரசியல் எதிர்பார்புக்கு இடையே, கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களின் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெறுகிறது.
கர்நாடகத்தில் கூட்டணி ஆட்சியை கவிழ்க்க ஆபரேஷன் தாமரை மூலம் காங்கிரஸ், ஜனதாதளம் எம்.எல்.ஏ.க்களை இழுக்க பா.ஜ.க தீவிரம் காட்டி வருகிறது. காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் சிலர் மும்பையிலும், மேலும் சிலர் டெல்லியில் முகாமிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகின.
இப்படி அடுத்தடுத்த அரசியல் அதிரடிகள் நடந்து கொண்டிருந்த நிலையில், தலைமறைவாக இருந்த இரண்டு காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் திரும்பி வந்துள்ளனர். இது குறித்து பேசிய முதல்வர் குமாரசாமி, தற்போது தலைமறைவாக இருக்கிறார்கள் என்று சொல்லப்படும் அனைத்து காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்களும் எங்களுடன் தொடர்பில்தான் உள்ளனர்.
அவர்கள் அனைவரும் என்னிடம் தகவல் தெரிவித்துவிட்டுத்தான் மும்பைக்குச் சென்றனர். என் தலைமையிலான அரசாங்கத்துக்கு எந்தவித அச்சுறுத்தலும் இல்லை என்று திட்டவட்டமாக தெரிவித்திருந்தார். அதை செய்தியாளர்கள் சந்திப்பில் திரும்பிவந்த எம்.எல்.ஏ பீமா நாயக். உறுதிப்படுத்தினார். இதன் மூலம் பா.ஜ.கவின் குதிரை பேர நாடகம் முடிவுக்கு வந்ததாக கூறப்பட்டது.
இந்நிலையில், கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களின் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற உள்ளது என காங்கிரஸ் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக, சித்தராமையா அலுவலகம் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டது.
அதில் சித்தராமையா கூறியிருப்பதாவது: விதான் சவுதாவில் உள்ள கூட்ட அரங்கத்தில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களின் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. கூட்டத்தில் அனைத்து காங்கிரஸ் எம்எல்ஏக்களும் தவறாது கலந்துகொள்ள வேண்டும்.
எக்காரணம் கொண்டும் கூட்டத்துக்கு வராமல் இருக்கக்கூடாது. அவ்வாறு வராதவர்களின் மேல் மிகக்கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளார்.
முன்னதாக சித்தராமையா ஹீப்ளியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
அனைத்து அனைத்து காங்கிரஸ் எம்எல்ஏக்களும் கட்டாயம் கலந்துகொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளோம்.
எதுவாக இருந்தாலும் கட்சி மேலிடத்துக்கு கொண்டு செல்லப்பட்டு தீர்வு காணப்படும். காங்கிரஸ் கட்சியிலும், எம்எல்ஏக்கள் தரப்பிலும் எவ்வித பிளவும் இல்லை என்றார்.