இனி ஆட்டம் செல்லாது.. பாஜக தாளத்திற்கு ஆடும் 4 காங். எம்எல்ஏக்கள்.. நடவடிக்கைக்கு சித்தராமையா ரெடி
பெங்களூர்: கர்நாடக அரசுக்கு எதிராக கலகம் செய்து வரும் 4 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் மீது கட்சித்தாவல் தடைச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சபாநாயகரிடம் புகார் அளிக்க அக்கட்சி முடிவு செய்துள்ளது.
கர்நாடகாவில் காங்கிரஸ்-ம.ஜ.த கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. குமாரசாமி முதல்வராக பதவி வகித்து வருகிறார். இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியின் 4 எம்எல்ஏக்கள் திடீரென மும்பையிலுள்ள ஹோட்டலில் தங்கி ஆட்சிக்கு எதிராக கலகம் செய்து வருகிறார்கள். இவர்களை பாஜக இயக்குவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், அனைத்து எம்எல்ஏக்களும் தனது தலைமையிலான கூட்டத்தில் பங்கேற்க வேண்டும் அல்லது நடவடிக்கை எடுக்கப்படும் என காங்கிரஸ் சட்டசபை குழு தலைவர் சித்தராமையா நேற்று அழைப்புவிடுத்தார். இன்று நடைபெற்ற சட்டசபை குழு கூட்டத்தில் 5 எம்எல்ஏக்கள் வருகை தரவில்லை. அதில், சிவாஜிநகர் தொகுதியின் ரோஷன் பெய்க், முன் அனுமதி பெற்று டெல்லியில் உள்ளார். எனவே மற்ற நால்வர் மீது நடவடிக்கை எடுக்க சித்தராமையா முடிவு செய்தார்.
கோகாக் தொகுதி எம்எல்ஏ ரமேஷ் ஜாரகிகோலி, பெல்லாரி ஊரக தொகுதி எம்எல்ஏ நாகேந்திரா, அதானி தொகுதி எம்எல்ஏ குமத்தல்லி, சிஞ்சோளி தொகுதி எம்எல்ஏ உமேஷ் ஜாதவ் ஆகியோர் மீது கட்சித் தாவல் தடைச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, காங்கிரஸ் கட்சி சார்பில், சபாநாயகரிடம் இன்று புகார் அளிக்க தீர்மானிக்கப்பட்டது. அவர்களை சஸ்பெண்ட் செய்ய மனுவில் கோரிக்கை விடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
சபாநாயகருக்கு லஞ்சம் கொடுத்ததை நிரூபித்தால் அரசியலில் இருந்தே விலகி விடுகிறேன்.. எடியூரப்பா சவால்
அரசுக்கு எதிராக, ஒருவேளை பாஜக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவந்தால், இவர்களை சஸ்பெண்ட் செய்வதன் மூலம், ஆட்சியை காப்பாற்ற வழி கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.