வெளியே வந்த பூனைக்குட்டி.. சித்தராமையா சொல்லிதான் ராஜினாமா செய்தோம்.. அதிருப்தி எம்எல்ஏ பகீர்
Recommended Video
பெங்களூர்: கர்நாடக காங்கிரஸ் அதிருப்தி எம்.எல்.ஏ.க்களில் ஒருவர், தாங்கள் காங்கிரஸ் தலைவர் சித்தராமையா வழிகாட்டுதலின்பேரில்தான் ராஜினாமா செய்துள்ளோம் என்று தெரிவித்துள்ள கருத்து பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
கர்நாடகாவில் காங்கிரஸ் மற்றும் மஜதவை சேர்ந்த 15 எம்எல்ஏக்கள் பதவியை ராஜினாமா செய்துள்ளனர். அதில் சிவராம் ஹெப்பர் ஒருவர். இவர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர். கடந்த 6ம் தேதி தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்து விட்டு மும்பையில் ஹோட்டலில் தஞ்சமடைந்திருந்தார்.
நம்பிக்கை ஓட்டெடுப்பில் குமாரசாமி அரசு கவிழ்ந்த நிலையில், அவர் நேற்று பெங்களூர் வந்திருந்தார். அப்போது ஒரு பகீர் தகவலை அவர் தெரிவித்தார்.
சித்தராமையா சொன்ன ஒரு வார்த்தை.. மைக்கால் லீக்.. கடும் கோபத்தில் குமாரசாமி.. அரசு கலைந்த பின்னணி
அவரே சொன்னார்
காங்கிரஸ் சட்டசபை குழு தலைவரும், முன்னாள் முதல்வருமான சித்தராமையாவின் வழிகாட்டுதலின்படியே எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தோம். அதன் பிறகு மும்பை சென்று விட்டோம். பாஜகவுடன் எங்களுக்கு தொடர்பு இல்லை. கர்நாடகாவில் பாஜக ஆட்சி அமைக்குமா இல்லையா என்பது பற்றி எங்களுக்கு தெரியாது. நாங்கள் அனைவரும் இன்னும் காங்கிரஸ் கட்சியில்தான் இருக்கிறோம். இப்போதும் சித்தராமையா தான் எங்கள் தலைவர்.
நம்பிக்கை
கட்சியிலிருந்து சிறிது நாட்கள் மட்டும் நாங்கள் விலகி இருக்குமாறு சித்தராமையா கூறி இருந்தார். அதன்படிதான் நடந்து கொண்டிருக்கிறோம். சித்தராமையாவின் முடிவின்படிதான் எதிர்காலத்திலும் நடந்து கொள்வோம். சபாநாயகர் மீது எங்களுக்கு நம்பிக்கை இருக்கிறது. எனவே, பதவி நீக்கம் தொடர்பாக எங்களுக்கு பயம் இல்லை.
குற்றச்சாட்டு
மத சார்பற்ற ஜனதா தளம்- காங்கிரஸ் கூட்டணி அரசு தொடர்பாக எங்களுக்கு அதிருப்தி இருந்தது. எனவேதான் வெளியே வந்தோம். இவ்வாறு சிவராம் ஹெப்பார் தெரிவித்தார். குமாரசாமி, அவர் தந்தை தேவகவுடா ஆகியோர் மீதான நீண்ட கால பகையால், சித்தராமையா தனது அதிருப்தி எம்எல்ஏக்களை பதவி விலகச் செய்துவிட்டார் என்று செய்திகள் வெளியான நிலையில், அதிருப்தி எம்எல்ஏ ஒருவரே இவ்வாறு பகிரங்கமாக தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சித்தராமையா மறுப்பு
இந்த குற்றச்சாட்டு பற்றி சித்தராமையா ட்வீட் ஒன்றில் கூறியுள்ளதாவது: அதிருப்தி எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்வதற்கும், ஆட்சியை கவிழ்ப்பதற்கும் நான் தூண்டிவிட்டதாக கூறப்படுவது பொய்யான குற்றச்சாட்டாகும். ராஜினாமா செய்ததன் காரணம் என்னவென்பது, இனி வரும் நிகழ்வுகளை வைத்து பார்த்த பிறகு தெளிவாகும். இவ்வாறு கூறி உள்ளார்.