அதிமுக பாணியில் கர்நாடக காங்கிரஸ்.. எதிர்ப்பு எம்எல்ஏக்கள் மீது சட்ட நடவடிக்கை.. அதிரடி அறிவிப்பு
பெங்களூர்: பதவியை ராஜினாமா செய்ய முயன்ற காங்கிரஸ் எம்எல்ஏக்கள் மீது கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க சபாநாயகருக்கு பரிந்துரை செய்ய முடிவு செய்துள்ளதாக, காங்கிரஸ் கட்சி மூத்த தலைவர் சித்தராமையா அறிவித்துள்ளார்.
கர்நாடகாவில், காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிகளின், கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், திடீரென காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 10 பேரும், மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் 3 எம்எல்ஏக்களும் ராஜினாமா செய்து விட்டு, மும்பையில் உள்ள ஓட்டலில் தங்கி உள்ளனர்.
அவர்கள் ஆளுக்கு ஒரு காரணத்தை கூறினாலும் கூட, இதன் பின்னணியில் பாஜக இருப்பதாக காங்கிரஸ் தலைமை குற்றம்சாட்டி வருகிறது. இந்த நிலையில், காங்கிரஸ் கட்சி எம்எல்ஏக்கள் கூட்டத்தில், அக்கட்சியின் சட்டசபை குழு தலைவர் சித்தராமையா அழைப்பு விடுத்திருந்தார்.
நான் எடுக்கும் முடிவு வரலாறாக மாறும்.. கர்நாடக சபாநாயகர் அதிரடி பேட்டி
வாக்கு சதவீதம்
இந்த ஆலோசனை கூட்டத்திற்கு, அனைத்து காங்கிரஸ் எம்எல்ஏக்களும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என்று எச்சரிக்கப்பட்டிருந்த நிலையில், ராஜினாமா கடிதம் கொடுத்த எம்எல்ஏக்கள் வருகை தரவில்லை. இதையடுத்து, ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு நிருபர்களிடம் பேசிய சித்தராமையா, நடைபெற்ற சட்டசபை தேர்தலில், காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கூட்டணிதான் பாஜகவை விட அதிகமாக வாக்கு பெற்றது. இருப்பினும் தனிப்பெரும் கட்சியாக பாஜக உருவெடுத்ததால் முதலில் அதை ஆட்சி அமைப்பதற்கு ஆளுநர் அழைப்பு விடுத்தார். எடியூரப்பாவும் முதல்வரானார். ஆனால் பெரும்பான்மையை நிரூபிப்பதில், எடியூரப்பா தோற்றுவிட்டார்.
6வது முறை
இதையடுத்து காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிகளின் கூட்டணி ஆட்சி கர்நாடகாவில் நடைபெற்று வருகிறது. இந்த ஆட்சி அமைந்தது முதல் 5 முறை அதை கலைப்பதற்கு பாஜக முயற்சி செய்தது. எம்எல்ஏக்களை மிரட்டுவது, விலைக்கு வாங்குவது என அழுக்கு அரசியலை அவர்கள் கையில் எடுத்துள்ளனர். இப்போது ஆறாவது முறையாக அவர்கள் ஆட்சியை கலைக்க முயற்சி செய்துள்ளனர்.
கட்சித்தாவல் தடைச் சட்டம்
எனவே ராஜினாமா செய்வதாக கடிதம் கொடுத்த காங்கிரஸ் எம்எல்ஏக்கள் மீது கட்சி தாவல் தடைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சபாநாயகரிடம் மனு அளிக்க முடிவு செய்துள்ளோம். அவ்வாறு நடவடிக்கை எடுக்கப்பட்டால், அந்த எம்எல்ஏக்கள் ஆறு வருடங்களுக்கு தேர்தலில் நிற்க முடியாது. வேறு எந்த பதவியிலும் தொடர முடியாது. எனவே இந்த எச்சரிக்கையை, கோரிக்கையாக எடுத்துக்கொண்டு விரைவில் அவர்கள் தங்கள் முடிவை மாற்றிக் கொள்ள வேண்டும். அல்லது நடவடிக்கையை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும்.
தர்ணா
மேலும், பாஜகவின் அழுக்கு அரசியலுக்கு எதிர்ப்பு தெரிவித்து, தலைமை செயலகம் அருகே உள்ள காந்தி சிலை அருகே காங்கிரஸ் கட்சி சற்று நேரத்தில் தர்ணா நடத்த உள்ளது. அதன் பிறகு, சபாநாயகரை சந்தித்து புகார் அளிக்க உள்ளோம். இவ்வாறு சித்தராமையா தெரிவித்தார். இதையடுத்து கர்நாடக அரசியலில் பரபரப்பு உச்ச கட்டத்தை எட்டியுள்ளது. தமிழகத்தில், அதிமுக அளித்த புகாரையடுத்து, தினகரன் ஆதரவு எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்ததை போல, கர்நாடக காங்கிரஸ் எம்எல்ஏக்கள் மீது சபாநாயகர் நடவடிக்கை எடுக்க வாய்ப்பு உள்ளது.