மொத்தமாக குவிந்த காங்கிரஸ் தொண்டர்கள்.. ஸ்தம்பித்துப் போன பெங்களூர்.. தெறிக்க விட்ட டிகே சிவகுமார்!
பெங்களூர்: மத்திய அரசு கொண்டுவந்த 3 விவசாய சட்டங்களுக்கு எதிராக பெங்களூர் நகரில் இன்று கர்நாடக காங்கிரஸ் கட்சி சார்பில் நடைபெற்ற மாபெரும் பேரணி மற்றும் போராட்டத்தால் நகரமே ஸ்தம்பித்து விட்டது.
நகரின் பல பகுதிகளில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. கர்நாடக காங்கிரஸ் தலைவர் டிகே சிவக்குமார் தலைமையில் ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
இதை ஏற்றுக்கொண்டு ஆயிரக்கணக்கான தொண்டர்கள் இன்று பெங்களூர் நகரில் குவிந்தனர்.
பெட்ரோல், டீசல் விலை
விவசாய சட்டங்கள் மட்டுமில்லை, அதிகரித்து வரும் பெட்ரோல், டீசல் விலைக்கு எதிராகவும் இந்த போராட்டத்திற்கு அழைப்புவிடுத்திருந்தார் டி.கே.சிவகுமார். ஆளுநரை சந்தித்து மனு கொடுக்க அவர்கள் திட்டமிட்டிருந்தனர். இதையடுத்து பெங்களூரு மெஜஸ்டிக் பகுதியை அடுத்து உள்ள சுதந்திர பூங்கா என்ற இடத்தில் இருந்து ஆளுநர் மாளிகைக்கு சுமார் 2 கிலோமீட்டர் தூரத்துக்கு பேரணியாக தொண்டர்கள் புறப்பட்டனர்.
போக்குவரத்து நெரிசல்
இந்த போராட்டத்தில் டிகே சிவகுமார், முன்னாள் முதல்வர் சித்தராமையா உள்ளிட்ட காங்கிரஸ் மூத்த தலைவர்களும் பங்கேற்றனர். ஆயிரக்கணக்கான தொண்டர்கள் வந்து கூடியதால் பெங்களூரு நகரின் மையப் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மொத்த பகுதியும் ஸ்தம்பித்துப் போனது.
அதிரடி படை
இதில் காங்கிரஸ் தொண்டர்கள் தவிர விவசாய அமைப்புகளை சேர்ந்த பிரமுகர்களும் பங்கேற்றுள்ளனர். ராஜ்பவன் நோக்கி செல்வதை தடுப்பதற்காக கர்நாடக அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டு தடுப்புகள் அமைக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.
காங்கிரஸ் தொண்டர்கள்
இதனிடையே பெங்களூர் நோக்கி வந்த காங்கிரஸ் தொண்டர்கள் நெடுஞ்சாலைகளில் ஆங்காங்கே காவல்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டதாக குற்றம்சாட்டிய சிவகுமார் தங்கள் கட்சியின் தொண்டர்கள் ரயில்கள் மூலமாக பெங்களூருக்கு வந்து சேர வேண்டும், ரயில் நிலையத்திலிருந்து திரளாக நாம் பேரணியை தொடங்கலாம் என்றும் தொண்டர்களுக்கு அறைகூவல் விடுத்தார்.