கர்நாடகத்தில் தொடரும் பரபரப்பு.. நட்சத்திர ஓட்டலில் நாளை காங். எம்எல்ஏ-க்கள் கூட்டம்
பெங்களூரு: கடந்த 2 வாரங்களுக்கும் மேலாக நீடித்து வரும் பெரும் பரபரப்புகளுக்கிடையே நாளை கர்நாடகாவில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது
கர்நாடக சட்டசபையில் வரும் திங்கட்கிழமை நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்தாலும் நடக்கலாம் என்ற சூழலில், பெங்களூருவில் உள்ள நட்சத்திர விடுதியில் நாளை கர்நாடக காங்கிரஸ் எம்எல்ஏ-க்கள் கூட்டம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கர்நாடகத்தில் நடைபெற்று வரும் காங்கிரஸ் - ஜேடிஎஸ் கூட்டணி அரசு மீது அதிருப்தியடைந்த அக்கட்சிகளை சேர்ந்த 15-க்கும் மேற்பட்ட எம்எல்ஏ-க்கள் கடந்த சில நாட்களுக்கு முன்னர் பதவியை ராஜினாமா செய்தனர். ஆனால் அவர்களது ராஜினாமாவை சபாநாயகர் உடனடியாக ஏற்கவில்லை.
ராஜினாமா செய்த கையோடு மும்பைக்கு பறந்த அதிருப்தி எம்எல்ஏ-க்கள் சபாநாயகருக்கு எதிராக, உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதனிடையே பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த தயாராக உள்ளதாக அறிவித்தார் முதல்வர் குமாரசாமி இதனால் அச்சமடைந்த பாஜக தங்கள் கட்சி எம்எல்ஏக்-களை பாதுகாத்தது.
இந்த களேபரங்களுக்கிடையே அதிருப்தி எம்எல்ஏ-க்கள் தொடர்ந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், ராஜினாமா கடிதங்கள் மீது முடிவடுக்க சபாநாயகருக்கு காலக்கெடு நிர்ணயிக்க முடியாது. அதே சமயம் நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்க அதிருப்தி எம்எல்ஏக்களை கட்டாயப்படுத்த கூடாது என தீர்ப்பளித்தது.
இதனையடுத்து கர்நாடக சட்டசபை வியாழக்கிழமை கூடிய போது நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நம்பிக்கை வாக்கெடுப்பின் மீதான விவாதத்தின் போது ஏற்பட்ட அமளியால், அவை பல முறை ஒத்தி வைக்கப்பட்டு இறுதியாக அடுத்த நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டது.
இதனால் அதிர்ச்சியடைந்த பாஜக உறுப்பினர்கள் ஆளுநரை சந்தித்து முறையிட்டனர். இதனையடுத்து வெள்ளி மதியம் 1.30-க்குள் வாக்கெடுப்பு நடத்தி முடிக்க உத்தரவிட்டார். ஆனால் அமளி தொடர்ந்ததால் மாலை 6 மணிக்குள் வாக்கெடுப்பு நடத்த கெடு விதிக்கப்பட்டது. அதிலும் நடத்தப்படவில்லை
பின்னர் 8.30 வரையும் அவை நடத்தப்பட்டு திங்கட்கிழமைக்கு ஒத்தி வைக்கப்பட்டது. திங்கட்கிழமை வாக்கெடுப்பு நடைபெறும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், நாளை காங்கிரஸ் எம்எல்ஏ-க்கள் கூட்டம் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.