கோவிலுக்கு வாழைப்பழம் வழங்கும் முஸ்லிம் வியாபாரி! கர்நாடகத்தில் கடும் எதிர்ப்பு! வெடித்த சர்ச்சை
பெங்களூர்: கர்நாடகத்தில் ஹிஜாப் சர்ச்சையை தொடர்ந்து கோவிலுக்கு டெண்டர் அடிப்படையில் வாழைப்பழம் வழங்கி வரும் முஸ்லிம் வியாபாரிக்கு கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. தற்போது இது சர்ச்சையாகி உள்ளது.
கர்நாடகத்தில் இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்தே மதம்சார்ந்து பல்வேறு பிரச்சனைகள் நடந்து வருகின்றன. கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிய எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
உடுப்பி மாவட்டத்தில் வெடித்த இந்த சர்ச்சை மாநிலம் முழுவதும் பரவி சில இடங்களில் வன்முறைகள் வெடித்தன. இதையடுத்து கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிய மாநில அரசு பிறப்பித்த உத்தரவை கர்நாடக உயர்நீதிமன்றம் உறுதி செய்தது.
பாஜகவில் இணைகிறாரா ஓபிஎஸ்? தேனி சென்றவருக்கு காவித்துண்டு அணிவித்து வரவேற்ற ‛தாமரை‛ நிர்வாகிகள்
முஸ்லிம் வியாபாரிகளுக்கு தடை
இதற்கும் மாணவிகள் எதிர்ப்பு தெரிவித்து தேர்வுகளை புறக்கணித்தனர். இது ஒருபுறம் இருக்க கடலோர கர்நாடக மாவட்டங்களான உடுப்பி, தட்சின கன்னடா மாவட்ட கோவில் திருவிழாக்களில் முஸ்லிம் வியாபாரிகள் வியாபாரம் செய்ய தடை விதிக்கப்பட்டது. மேலும் பல மாவட்டங்களில் இதே கோரிக்கைகள் எழுந்தன.
சூறையாடப்பட்ட கடை
இதன் தொடர்ச்சியாக இதுதவிர பள்ளிவாசல்களில் ஒலிபெருக்கி பயன்பாட்டை கட்டுப்படுத்த வேண்டும், பொது மார்க்கெட்டுகளில் முஸ்லிம் வியாபாரிகளிடம் பொருட்கள் வாங்குவதை தவிர்க்க வேண்டும் என பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட்டன. மேலும் தார்வார் கோவிலில் முஸ்லிம் வியாபாரியின் தர்ப்பூசணி கடை சூறையாடப்பட்டது. இதனால் ஓயாத சர்ச்சைகள் வெடித்தன. இதற்கிடையே தான் கடந்த சில வாரங்களாக கர்நாடகத்தில் மதம்சார்ந்த பிரச்சனைகள் இன்றி இருந்தது. தற்போது மீண்டும் ஒரு பிரச்சனை வெடித்துள்ளது. அதன் விபரம் வருமாறு:
புதிய பிரச்சனை என்ன?
தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு அருகே குடுபு கிராமத்தில் அனந்தபத்மநாபா கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டு முழுவதும் பல்வேறு பூஜைகள் நடக்கும். ஒரு ஆண்டு முழுவதும் பூஜைகளுக்கு தேவையான வாழைப்பழங்களை வழங்கும் நபர் டெண்டர் மூலம் தேர்வு செய்யப்படுகின்றனர். அதன்படி 2021 ஜூலை 1 முதல் 2022 ஜூன் 30 வரை வாழைப்பழம் வழங்கும் டெண்டரை முஸ்லிம் வியாபாரி ஒருவர் எடுத்தார். தற்போது அவர் கோவிலுக்கு வாழைப்பழங்களை வழங்கி வருகிறார். இந்நிலையில் தான் தற்போது இதற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
வாழைப்பழம் வழங்க எதிர்ப்பு
அதாவது இந்த விஷயம் பற்றி அறிந்த இந்து அமைப்பினர் முஸ்லிம் வியாபாரி வழங்கும் வாழைப்பழத்தை பழத்தை கோவிலில் பயன்படுத்தக்கூடாது. மேலும் முஸ்லிம் வியாபாரிகள் வியாபாரம் செய்ய அனுமதிக்க கூடாது என கூறி சர்ச்சையை கிளப்பினர். இதையடுத்து அவர்களிடம் கோவில் நிர்வாகம் சமாதானம் பேசியுள்ளது.
கோவில் நிர்வாகம் கூறுவது என்ன?
இதுபற்றி கோவில் நிர்வாகம் சார்பில், ‛‛கோவிலுக்கு வாழைப்பழங்கள் வழங்க கடந்த ஆண்டு டெண்டர் விடப்பட்டது. டெண்டர் காலம் ஜூன் 30ல் முடிவடைகிறது. அதன் பிறகு அடுத்த டெண்டர் யாருக்கு வழங்கலாம் என்பதை முடிவு செய்து கொள்ளலாம். அதுவரை போராட்டத்தை கைவிடுங்கள்'' என கேட்டு கொள்ளப்பட்டது. இதுபற்றி கோவில் செயல் அதிகாரி ஜெகதீஷ் கூறுகையில், ‛‛நான் சமீபத்தில் தான் பொறுப்பு ஏற்றேன். இந்த பிரச்சனைக்கு ஜூன் 30க்கு பிறகு தீர்வு காணப்படும்'' என்றார்.