சசிகலா உடன் சிறையில் இருந்த இளவரசிக்கு கொரோனா பரிசோதனை- சிறை நிர்வாகம் தகவல்
பெங்களூரு: பரப்பன அக்ரஹாரா சிறையில் சசிகலா உடன் இருந்த இளவரசிக்கும் இன்று கொரோனா பரிசோதனை நடத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சசிகலாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து இளவரசிக்கும் இன்று பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.

சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகிய மூன்று பேரும் அடைக்கப்பட்டுள்ளனர். இன்றும் சில நாட்களில் இவர்களின் தண்டனை முடிந்து விடுதலையாக உள்ள நிலையில், நேற்று முன்தினம் திடீரென சசிகலாவுக்கு காய்ச்சல் மற்றும் மூச்சு திணறல் ஏற்பட்டது.

இதனையடுத்து பெங்களூரு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சசிகலாவுக்கு மேற்கொண்ட ஆர்டிபிசிஆர் பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதியானது. பின்னர் சசிகலா உடல்நலம் குறித்து அரசு மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில், கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள சசிகலாவுக்கு நிமோனியா காய்ச்சல் கடுமையாக இருக்கிறது. இதனால் சசிகலாவின் உடல்நிலை தொடர்ந்து தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது என மருத்துவமனை தகவல் தெரிவித்து உள்ளது.
இந்தநிலையில் சசிகலாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, அவருடன் ஒன்றாக சிறையில் இருந்த இளவரசிக்கும் பரிசோதனை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த தகவலை பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறை கண்காணிப்பாளர் லதா தெரிவித்துள்ளார்.