பெங்களூரில் கொஞ்சமும் குறையாத கொரோனா.. ஆக்சிஜன் பற்றாக்குறையால் அச்சம்.. செய்வதறியாத கர்நாடக அரசு
பெங்களூர்: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்திருப்பது போலத் தெரிந்தாலும், அண்டை மாநிலமான கர்நாடகாவில், அதிலும் குறிப்பாக பெங்களூர் நகரில் மிகப் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது.
கர்நாடக மாநிலத்தில் தினமும் சுமார் 8 ஆயிரத்துக்கும் அதிகமாக கொரோனா வைரஸ் பாதிப்புள்ள நோயாளிகள் கண்டறியப்பட்டு வருகிறார்கள். அதில் 3 ஆயிரம் முதல் மூவாயிரத்து 500 வரையிலான நோயாளிகள் பெங்களூரைச் சேர்ந்தவர்கள் என்பது அதிர்ச்சி அளிக்கும் விஷயமாகும். அடுத்தபடியாக மைசூர் மற்றும் ஹாசன் ஆகிய மாவட்டங்களில் அதிக பாதிப்பு பதிவாகிறது. இருப்பினும் அங்கும் 500க்கு குறைவான அளவுக்குதான் தினசரி பாதிப்புகள் உள்ளன.
பெங்களூர் நகரத்தில் இந்த அளவுக்கு பாதிப்பு அதிகரிக்க காரணம், தமிழக மாவட்டங்கள் மற்றும் சென்னை போல இங்கு நீண்ட காலமாக கட்டுப்பாடுகள் கடைபிடிக்கப்படவில்லை.
மீண்டும் வேகமெடுக்கும் கொரோனா.. உலக நாடுகள் அதிர்ச்சி.. ஒரே நாளில் இந்தியாவில் அதிக பலி
கண்காணிப்பே இல்லை
வெகுநாட்களாகவே பெங்களூரு உட்பட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் பொது போக்குவரத்து இயங்க அனுமதிக்கப் பட்டுள்ளது. ஆட்டோ, கால்டாக்சி உள்ளிட்ட பொதுப் போக்குவரத்துகள் இயங்கி வந்தன. பொதுமக்கள் அருகருகே அமர்ந்து பயணிப்பது உள்ளிட்டவற்றின் காரணமாக பாதிப்புகளும் அதிகமாகி இருக்கிறது. மேலும், கொரோனா பாதித்தவர்களை வீட்டில் தனிமைப்படுத்தினாலும், அதிகாரிகள் அதை கண்காணிப்பது கிடையாது. எனவே அவர்கள் வெளியே சுற்றி பலருக்கும் பரப்பி வருகிறார்கள்.
பெட், ஆக்சிஜன் தட்டுப்பாடு
இவ்வாறு நோயாளிகள் எண்ணிக்கை அதிகரிப்பதால் பெங்களூரு நகரில் ஐசியு வார்டுகளில், பெட் கிடைப்பது கடினமான விஷயமாக மாறியுள்ளது. பெட்களுக்கு பற்றாக்குறை இருப்பதாகவும் கூறப்படுகிறது. கர்நாடகாவில் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை குறையாமல் இருந்து வருகிறது. ஒரு நோயாளி குறைந்தபட்சம் 15 நாட்களாவது மருத்துவமனையில் சிகிச்சை பெறவேண்டிய அவசியம் இருப்பதால் தினமும் நோயாளிகள் எண்ணிக்கை அதிகரிப்பது அவர்களுக்கு படுக்கை கிடைக்காமல் போவதற்கும், ஆக்சிஜன் கிடைக்காமல் போவதற்கும் வழி வகுத்து விடும் வாய்ப்பு இருக்கிறது. ஏற்கனவே பல மருத்துவமனைகளிலும் ஆக்சிஜன் சிலிண்டர் தட்டுப்பாடு இருக்கிறது.
வேகமாக நடக்குமா
பெங்களூர் நகரில் உள்ள மருத்துவமனைகளும், அரசு மருத்துவ கல்லூரிகளும் தங்களது படுக்கை எண்ணிக்கை மற்றும் ஐசியூ படுக்கையை அதிகரிக்க வேண்டும் என்று அரசு கேட்டுக் கொண்டிருக்கிறது. ஆனால் இது அவ்வளவு வேகமாக நடக்கக் கூடிய விஷயம் இல்லை என்பதுதான் இதிலுள்ள கவலையளிக்கும் விஷயமாகும். இதுகுறித்து கர்நாடக மாநிலம் மருத்துவக் கல்வித் துறை அமைச்சர் சுதாகர் அளித்த பேட்டியில், ஐசியு படுக்கை வசதிகளை அதிகரிக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. நோயாளிகளை அனுமதிக்கும் அளவுக்கான படுக்கை வசதிகள் போதிய அளவுக்கு இருக்கின்றன. ஆனால் ஐசியூ வார்டு மற்றும் வென்டிலேட்டர் வசதிகளைத்தான் உடனடியாக அதிகப்படுத்த வேண்டிய தேவை உள்ளது.
அச்சம் வேண்டாம் என்கிறது அரசு
கொரோனா சிகிச்சை அளிக்க கூடிய மையங்களை மூடி உள்ளதை நினைத்து பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம். தேவை ஏற்பட்டால் அந்த மையங்கள் மறுபடி திறக்கப்படும். தற்போது, நோயாளிகள் எண்ணிக்கை குறைவாக இருப்பதாக நினைத்துதான் அந்த மையங்களை மூடி இருந்தோம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். பெங்களூர் மருத்துவக் கல்லூரி மற்றும் ஆய்வு இன்ஸ்டிடியூட் டீன், டாக்டர் ஜெயந்தி இதுபற்றி கூறுகையில், எங்களது மருத்துவ கல்லூரியில் 52 ஐசியு வார்டுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. விரைவில் மேலும் 72 படுக்கை அதிகரிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
பள்ளிகள் திறந்தால்..
தனியார் மருத்துவமனையொன்றின் தலைமை செயல் அதிகாரி சீனிவாசன் என்பவர் இதுபற்றி கூறுகையில், ஆக்சிஜன் வசதி மற்றும் ஐசியு படுக்கை வசதி ஆகியவற்றை நினைத்தவுடன் அதிகரித்து விடமுடியாது. இவற்றை ஏற்படுத்துவதற்கான செலவீனம் அதிகமாகும். வென்டிலேட்டர் கருவிக்கான செலவு அதிகம். அந்த கருவி எளிதாக கிடைப்பது கிடையாது. இணை நோய்கள் இருக்கும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து கொரோனா தொற்றிலிருந்து மீட்டு எடுப்பது மிகவும் சவாலான விஷயம். சில நேரங்களில் இளம் வயதை சேர்ந்த நோயாளிகளுக்கு கூட மோசமான பாதிப்பு ஏற்படுகிறது. பள்ளி, கல்லூரிகள் போன்றவற்றை திறப்பதற்கு அரசு அனுமதி கொடுத்தால், அடுத்த 6 மாதங்களில் நிலைமை இன்னும் மோசமாக கூடும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
குறைத்து காட்டிய அரசு
இதனிடையே நான்கு நாட்களுக்கு முன்பாக கர்நாடகாவில் ஒரு நாளைக்கு 7 ஆயிரத்து 300 என்ற அளவுக்கு கொரோனா பதிவானதாக அரசு செய்தி வெளியிட்டது. வழக்கத்தை விட இது சற்று குறைவான எண்ணிக்கை ஆகும். ஆனால் அன்று வழக்கமாக செய்யப்படும் 70,000 என்ற அளவுக்கு பரிசோதனைகள் இல்லாமல் வெறும் 42 ஆயிரம் மட்டுமே பரிசோதனை நடந்துள்ளன. இதுதான் அந்த எண்ணிக்கை குறைவதற்கு காரணம் என்று கூறப்படுகிறது. இவ்வாறு எண்ணிக்கையை குறைத்து காட்டினாலும் நடைமுறையில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவமனைகள் திணறி வருகின்றன என்பதுதான் யதார்த்தம்.
செலவிட்ட பணம் எங்கே
லாக்டவுன் உள்ளிட்ட ஏதாவது ஒரு அவசர கால நடவடிக்கை எடுத்தது நோய்களை கட்டுப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை ஒரு பக்கம் வலுத்து வருகிறது. இதனிடையே கொரோனா நோய்த்தொற்றை குறைப்பதற்காக மார்ச் முதல் ஆகஸ்ட் மாதம் வரை கர்நாடக அரசு 4 ஆயிரத்து 200 கோடி ரூபாய் செலவு செய்துள்ளதாக அந்த அரசு தெரிவித்துள்ளது. இந்த செலவினத்தில் பெரும் ஊழல் நடந்திருப்பதாக பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது. சுமார் 2,300 கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் நடந்துள்ளது என்பது காங்கிரஸ் கட்சியின் குற்றச்சாட்டாகும். மொத்தத்தில், ஒரு பக்கம் அனைத்து பொருளாதார நடவடிக்கைகளையும் திறந்துவிட்டுவிட்டு, போக்குவரத்தையும் அனுமதித்து விட்டு, மற்றொரு பகுதியை படுக்கை வசதி மற்றும் சிகிச்சை வசதி ஏற்படுத்த முடியாமல் கர்நாடக அரசு தடுமாறி வருவதால் பொதுமக்கள் பீதியில் இருக்கிறார்கள்.