பெங்களூரில்.. சத்தம் போடாமல் கிடுகிடுவென உயரும் கொரோனா பலி.. ஜூலையில் மட்டும் 860 பேர்!
பெங்களூரு: கர்நாடகா மாநிலத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று விகிதம் அதிகரித்து வருகிறது. குறிப்பாக தலைநகரமான பெங்களூருவில் இந்த மாதம் ஜூலை ஒன்றாம் தேதியில் இருந்து இதுவரை 65% பேர் கொரோனாவுக்கு பலியாகி இருக்கும் அதிர்ச்சி செய்தி வெளியாகி இருக்கிறது. இம்மாதத்தில் மட்டும் 28 ஆம் தேதி வரை 860 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர்.
கர்நாடகாவில் இதுவரை 1.7 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. 40,504 பேர் மீண்டு வந்துள்ளனர். 2,055 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்தமாக உயிரிழந்தவர்களில் இந்த மாதத்தில் மட்டும் 860 பேர் பெங்களூருவில் உயிரிழந்துள்ளனர்.
இவர்களில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட 24 மணி நேரத்தில் 479 (55%) பேர் உயிரிழந்துள்ளனர். அதாவது வீட்டில் இருக்கும்போது, உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அன்றே உயிரிழந்துள்ளனர். 94 (10%) பேர் மருத்துவமனைக்கு கொண்டு வரும் வழியில் உயிரிழந்துள்ளனர். 24 மணி நேரத்தில் உயிரிழந்தவர்கள் அனைவரும் மூச்சுத் திணறல் காரணமாக இறந்துள்ளனர்.
இறுதிக் கட்டத்தில் மருத்துவமனைக்கு வருவதால், பரிசோதனை மேற்கொண்டு மருத்துவம் அளிக்க முடியவில்லை என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். பெங்களூருவில் இருக்கும் ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட 50 கொரோனா நோயாளிகளில் 21 பேர் 12 மணி நேரத்துக்குள் இறந்துள்ளனர். 70% நோயாளிகள் ஐசியூவில் வென்டிலேட்டரில் வைக்கப்பட்டு இறந்துள்ளனர். இவர்கள் அனைவரும் மருத்துவமனைக்கு தாமதமாக வந்ததுதான் காரணம் என்று கூறப்படுகிறது.
திமுக மேல் விழுந்த இமேஜ் மாறும்போது இது தேவையா.. சர்ச்சையாகும் சென்னை மேற்கு திமுக மா.செ. பேரணி!
பெங்களூருவில் இருக்கும் அரசு மருத்துவமனைகளில் 500 ஐசியூ படுக்கைகள் தேவை. ஆனால், தற்போதைக்கு வெறும் 100 படுக்கைகள் மட்டுமே உள்ளன. மார்ச் மற்றும் ஏப்ரல் மத்தியில் மட்டும் பெங்களூருவில் 957 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது. ஜூலையில் மட்டும் 860 பேர் உயிரிழந்துள்ளனர். பெங்களூருவில் பதிவாகி இருக்கும் கொரோனா நோயாளிகளில் 48,821 பேரில் 44,266 பேர் இந்த மாதம் பதிவானவர்கள். இவர்களில் ஜூலை 28 ஆம் தேதி வரை 35,102 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பெங்களூருவில் மட்டும் பத்து லட்சம் பேருக்கும் 95.3 உயிரிழப்புகள் நடந்துள்ளது. மாநிலத்தில் ஏற்படும் உயிரிழப்புகளில் மூன்று மடங்கு பெங்களூருவில் ஏற்பட்டுள்ளது.