விப்ரோவுக்கே இந்த நிலை.. ஊழியர்களை ஊதியம் இல்லா லீவில் அனுப்புகிறது.. ஐடி ஊழியர்கள் அதிர்ச்சி
பெங்களூர்: இந்தியாவின் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றான விப்ரோ (Wipro), செலவீனங்களை குறைக்கும் நடவடிக்கைகளில் இறங்கப்போகிறது.
புதிதாக பணிக்கு ஆள் எடுப்பதை தற்காலிகமாக நிறுத்தியுள்ளது விப்ரோ. அதுமட்டுமல்லாது, ஏற்கனவே பணியாற்றும் ஊழியர்களில் பலரை, சம்பளம் இல்லாத விடுப்பில் வைத்திருக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
விப்ரோ இதுபோன்ற நடவடிக்கை எடுக்கும் நிலையில், வேறு ஐடி நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கும் அந்தந்த நிறுவனங்கள் இதுபோன்ற நிபந்தனைகளை விதிக்க கூடும் அல்லது பணி நீக்கம் கூட செய்யக்கூடும் என்ற அச்சம் நிலவுகிறது.
நிகர லாபம்
விப்ரோ நிறுவனத்தின் நான்காவது காலாண்டு நிகர லாபம், 5.3 சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ள நிலையில், இதுபோன்ற ஒரு காஸ்ட் கட்டிங் குறித்த செய்தியும் கூடவே வெளியாகியுள்ளது. மூன்றாவது காலாண்டில் விப்ரோவில் 187,318 பணியாளர்கள் பணிபுரிந்த நிலையில், அது நான்காவது காலாண்டில் குறைந்துள்ளது. தற்போது அந்த நிறுவனத்தில் 182,886 ஊழியர்கள் பணியாற்றுகிறார்கள். அவர்களில் பெரும்பாலானோருக்கு சம்பளம் இல்லாத விடுமுறை கொடுக்க விப்ரோ திட்டமிட்டுள்ளதாக ஐடி துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
புதிய பணியாளர்கள்
விப்ரோ நிறுவனத்தின், தலைமை மனிதவள (ஹெச்.ஆர்) அதிகாரி, சவுரப் கோவில், இதுபற்றி கூறுகையில், அடுத்த காலாண்டில், புதிதாக யாரையும் பணிக்கு எடுக்கப்போவதில்லை. கேம்பஸ் பணியாளர் தேர்வும் கிடையாது. நிலைமையை மேம்படுத்துவது குறித்து ஆய்வு செய்கிறோம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
லாங் லீவு
சவுரப் கோவில் மேலும் கூறியதாவது: விப்ரோவில் பணியாற்றும் 93 சதவீதம் பணியாளர்கள் தற்போது, வீடுகளில் இருந்து வேலை பார்த்து வருகிறார்கள். காஸ்ட் கட்டிங் எங்கெல்லாம் செய்ய முடியுமோ, அங்கெல்லாம் செய்ய உள்ளோம். லாங் லீவுகளில் ஊழியர்கள் சென்றாலும் ஓகேதான். இது கடினமான நேரம் என்பதால், கடினமான முடிவுகளை எடுக்க வேண்டியுள்ளது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
அதிகம் பணியாளர்கள்
புதிதாக வேலைக்கு எடுக்க வேண்டியவர்கள் எத்தனை பேர் என்பதை விப்ரோ கூறவில்லை என்றாலும், 2019-20ம் நிதியாண்டில், அந்த நிறுவனம், வழக்கத்தை விட இரு மடங்கு அதிக பணியாளர்களை வேலைக்கு சேர்த்தது. 12,000 பிரஷர்களை பணிக்கு சேர்த்தது. 2021ம் ஆண்டிலும் இதுபோல பணியாளர் சேர்க்கை இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கொரோனா பாதிப்பு காரணமாக, விப்ரோ உள்ளிட்ட ஐடி நிறுவனங்கள் பாதிப்பை சந்தித்துள்ளன.
16 மில்லியன் டாலர்
"ஐடி சேவை வருவாய், மார்ச் 31ம் தேதியுடன் நிறைவடைந்த காலாண்டில், குறைந்துவிட்டது. கொரோனா பிரச்சினை இதற்கு காரணம். 14 முததல் 16 மில்லியன் டாலர் அளவுக்கான வருமானம் குறைந்துள்ளது என்று கூறியிருந்தது, விப்ரோ நிறுவனம் வெளியிட்ட அறிக்கை.