கொரோனா கொடுமை: கர்நாடகாவில் தியேட்டர்கள், மால்கள், பப்புகள் 1 வாரத்திற்கு மூடல்.. அதிரடி உத்தரவு
பெங்களூர்: கர்நாடகாவில் அடுத்த ஒரு வாரத்திற்கு, தியேட்டர்கள், மால்கள் மூடப்படுவதாக முதல்வர் எடியூரப்பா அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
Recommended Video
கொரோனா வைரஸ் பாதிப்பால் பெங்களூர் உட்பட கர்நாடகாவில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கூகுள் உட்பட பல ஐடி நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து பல ஐடி நிறுவனங்கள் வீட்டிலிருந்து வேலை பார்க்க ஊழியர்களுக்கு அனுமதி வழங்கியுள்ளன. ஆரம்ப பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
குல்பர்கா நகரைச் சேர்ந்த முதியவர் ஒருவர் கொரோனா பாதிப்பால், உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டது. இந்த நிலையில், முதல்வர் எடியூரப்பா இன்று ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டார்.
அதில், கர்நாடகா முழுக்க அடுத்த ஒரு வாரத்திற்கு, தியேட்டர்கள், பப்புகள், மால்கள் அனைத்தும் மூடப்பட வேண்டும் என தெரிவித்தார். திருமண விழா உட்பட மக்கள் பெரிய அளவில் கூடக் கூடிய நிகழ்வுகளையும் நடத்த வேண்டாம் என எடியூரப்பா கேட்டுக் கொண்டுள்ளார்.
ஒருவேளை, இந்த வாரத்தில், திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தால், அதிகபட்சம் 100 பேருக்கு மேல் கூட வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதாவது உறவினர்கள் திருமண விழாவை முடிந்த அளவு தவிர்த்து கூட்டத்தை குறைக்க கோரிக்கைவிடுக்கப்பட்டுள்ளது.
மேலும், ஜிம், ஸ்போர்ட்ஸ் கிளப், நீச்சல் குளம், நைட் கிளப், ஆகியவையும் அடுத்த 1 வாரம் மூடப்பட வேண்டும் என்று கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது. சுற்றுலா செல்ல வேண்டாம், பயணங்களை தவிர்க்க வேண்டும், முடிந்த அளவு வீட்டுக்குள்ளேயே எல்லோரும் உட்காருங்கள். இவ்வாறு எடியூரப்பா தெரிவித்தார்.
அதேநேரம், ஏற்கனவே அறிவித்தபடி பள்ளிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாகவும், ஆனால், பொதுத் தேர்வுகள் நடைபெறும் வகுப்புகளுக்கு இந்த உத்தரவு பொருந்தாது என்றும் எடியூரப்பா தெரிவித்தார்.
மருத்துவ துறை நிபுணர்களுடன் கலந்து ஆலோசித்து, தீவிரமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு எடுத்துள்ளதாகவும், எனவே பொதுமக்கள் இதற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் எடியூரப்பா தெரிவித்தார்.