"அம்மா.. வா.. வீட்டுக்கு போலாம்" கதறிய குழந்தை.. பதறி கண்ணீர் விட்ட நர்ஸ் சுனந்தா.. உருக்கும் வீடியோ
பெற்ற தாயை பார்த்து 3 வயது குழந்தை கதறி அழுதது காண்போரை கலங்க வைத்துள்ளது
பெங்களூரு: "அம்மா.. வா.. வீட்டுக்கு போலாம்.." என்று கதறியழுத பெற்ற குழந்தையை கண்டு கண்ணீர் விட்டு அழுதார் நர்ஸ் சுனந்தா.. இந்த பாச போராட்டம் இணையத்தில் வைரலாகி அனைவரின் கண்களையும் குளமாக்கி வருகிறது!
Recommended Video
இந்தியாவில் ஊடுருவிய கொரோனாவைரஸ் ஒவ்வொரு மாநிலத்தையும் உலுக்கி எடுத்து வருகிறது.. அதன்படி கர்நாடகத்திலும் வேகமாக தொற்று பரவி உள்ளதால், முழு தீவிரமான நடவடிக்கையில் அம்மாநில அரசு இறங்கி உள்ளது.
இதனால் ஏராளமான டாக்டர்களும், நர்ஸ்களும் தங்கள் குடும்பங்களை மறந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சையில் உள்ளனர்... இவர்களின் அர்ப்பணிப்புகளுக்கு நாள்தோறும் நாட்டு மக்கள் நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்து வருகின்றனர்.
சுனந்தா
சுக, துக்கங்களை மறந்து பொதுநலனில் தங்களை ஈடுபடுத்தி கொண்டு வரும் லட்சக்கணக்கான நர்ஸ்களில் ஒருவர்தான் சுனந்தா.. பெலகாவி மாவட்டம் பால்கா என்ற கிராமத்தை சேர்ந்தவர் 31 வயதாகிறது. அந்த பகுதியில் இருக்கும் ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் நர்ஸ்-ஆக வேலை பார்க்கிறார்.. 4 வருடமாக இங்குதான் வேலை பார்த்து வருகிறார்.. இவருக்கு 3வயதில் ஐஸ்வரியா என்ற பெண் குழந்தை உள்ளது.
அம்மா
சுனந்தாவுக்கு கொரோனா வார்டில் ஸ்பெஷல் டியூட்டி போட்டுள்ளதால், அவரால் கடந்த சில தினங்களாக வீட்டுக்கு செல்ல முடியவில்லை. 15 நாளாக அம்மாவை பார்க்காமல் குழந்தை ஐஸ்வர்யா துடித்துவிட்டாள்.. தினமும் அம்மா வேணும், அம்மா வேணும் என்று அழுதபடியே இருந்திருக்கிறாள்... அதனால் தூரமாக நின்றாவது அம்மாவை காட்டலாம் என்று அவரது அப்பா, குழந்தையை தூக்கு கொண்டு சுனந்தா பணிபுரியும் ஆஸ்பத்திரிக்கு வந்தார்.
கதறியது
கணவனும், குழந்தையும் வந்திருப்பது தெரிந்ததும் வெளியே ஓடி வந்தார் சுனந்தா.. பைக்கில் உட்கார வைக்கப்பட்டிருக்கும் குழந்தையை தூரமாகவே நின்று பார்த்தார் சுனந்தா... கொரோனா வார்டில் பணியாற்றி வருவதால் குழந்தைக்கு அருகில் செல்லாமல் தூரத்திலேயே நின்றார்.. 15 நாள் கழித்து தாயை பார்த்ததும் குழந்தை வீல் என கதறி ஆரம்பித்துவிட்டது.. "அம்மா.. வா.. வீட்டுக்கு போகலாம்.. அம்மா வா..." என்று கதறி அழுதது.
வீடியோ
குழந்தை அழுவதை பார்த்ததும் சுனந்தாவும் அழுதுவிட்டார்.. இந்த பாசப்போராட்டத்தை பார்த்து அங்கிருந்த எல்லாருமே கண் கலங்கினர்.. குழந்தையை கண்ணால் பார்த்தும் வாரி அணைக்க முடியவில்லையே... தூக்கி கொஞ்ச முடியவில்லையே, என்ற ஏக்கத்தில் சுனந்தா கண்ணீர் விட்டு அழுத காட்சியை அங்கிருந்தோர் செல்போனில் வீடியோவாகவும் எடுத்தனர். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருவதுடன், சுனந்தாவுக்கு நெஞ்சார்ந்த பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்!