பெங்களூரில் அதிகரிக்கும் கொரோனா வைரஸ் பிறழ்வு.. பயண ஐடியா இருந்தா யோசிங்க!
பெங்களூர்: தேசிய சராசரியுடன் ஒப்பிடும்போது, பெங்களூரில் கொரோனா வைரஸ் புதிய திரிபு விகிதம் அதிகமாக உள்ளது என்று இந்திய அறிவியல் கழகத்தின் (ஐ.ஐ.எஸ்.சி) ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
ஐ.ஐ.எஸ்.சி.யின் உயிர்வேதியியல் துறையின் பேராசிரியர் உத்பால் டட்டு தலைமையிலான ஆய்வுக் குழு, பெங்களூரில் கோவிட் -19 உறுதி செய்யப்பட்ட நபர்களின் மரபணுவில் நடத்தப்பட்ட சோதனையில், ஒரு சாம்பிள் 11 க்கும் மேற்பட்ட பிறழ்வுகளைக் கொண்டிருப்பதைக் கண்டறியப்பட்டுள்ளது. இது தேசிய சராசரியை விட (8.4) அதிகமாகும். தவிர ஐ.ஐ.எஸ்.சி.யின் அறிக்கையின்படி உலக சராசரி (7.3) விடவும் அதிகமாகும்.
இதுகுறித்து பேராசிரியர் டட்டு கூறுகையில், பெங்களூரில் கொரோனா வைரஸ் உருமாறி புதிய திரிபாக உருவாகி இருப்பதை கண்டறிந்துள்ளோம். அதற்கு D614G என்று பெயரிடப்பட்டுள்ளது. ஆனால் இந்த புதிய வகை கொரோனா தடுப்பூசிகளின் செயல்திறனைக் குறைக்குமா அல்லது மீண்டும் புதிய கோவிட் வைரஸ் பரவல் எழுச்சி பெறுமா? என்பது குறித்த ஆய்வு முடிவு இன்னும் வெளியாகவில்லை" என்றார்.
அதேசமயம், "சமீபத்திய தகவல்களின்படி, N440K எனும் கொரோனா மாறுபாடும் கர்நாடகாவில் அதிக எண்ணிக்கையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது" என்று சிஎஸ்ஐஆர்-ஐஜிஐபியின் துணை பேராசிரியர் வினோத் ஸ்கேரியா கூறினார்.
இந்த புதிய வைரஸ் திரிபுகளின் வேகம், சிறந்த சோதனை முறைகள் தேவை என்பதை நமக்கு உணர்த்துகிறது என்று பேராசிரியர் டட்டு கூறியுள்ளார்.