வீட்டின் அருகே கொரோனா நோயாளிகள்.. அவசரமாக வீடு மாறும் முதல்வர் எடியூரப்பா
பெங்களூரு: கர்நாடகா முதல்வர் எடியூரப்பாவின் வீடு அருகே 5 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த முதல்வர் எடியூரப்பா தனது வீட்டை அவசரமாக காலி செய்து இன்றே வேறு வீட்டுக்கு குடி பெயர்வதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
Recommended Video
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 700ஐ நெருங்கி வரும் நிலையில் மக்களிடையே சமூக தொற்றாக மாறாமல் இருப்பதற்காக நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கர்நாடகா மாநிலத்தில் இதுவரை 1.30 லட்சம் பேருக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதில் 55 பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதியாகி உள்ளது. இரண்டு பேர் அங்கு கொரோனாவால் இறந்துள்ளனர்.
இந்நிலையில் கர்நாடகாவில் பெங்களூரு டாலர்ஸ் காலனியில் முதல்வர் எடியூரப்பாவின் இல்லம் அமைந்துள்ளது. வழக்கமாக இவர் காலையில் வெளியில் சென்று நடைபயிற்சி மேற்கொள்வார். இப்போது கொரோனா பிரச்னையால் வீட்டிலேயே முடங்கி கிடக்கிறார். நேற்று முன்தினம் யுகாதி என்பதால் வீட்டில் பூஜை செய்து வழிபட்டார்.
இந்நிலையில் டாலர்ஸ் காலனியில் எடியூரப்பா வசிக்கும் வீட்டின் அருகே கொரோனா நோய் பாதித்த 5 பேரை சுகாதாரத்துறையினர் கண்டறிந்துள்ளனர். இதனால் அந்த பகுதியில் அவர்கள் யார் யாருடன் தொடர்பில் இருந்தார்கள் என்பதை கண்டறிந்து அவர்களை தனிமைப்படுத்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
இதன் காரணமாக முதல்வர் எடியூரப்பா அரசு இல்லமான காவிரியில் குடியேற முடிவு செய்துள்ளார். இதற்காக பெங்களூரு மாநகராட்சி ஊழியர்கள் காவிரி இல்லத்திற்கு சென்று நேற்று சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர். அத்துடன் கிருமி நாசினியும் தெளித்தனர். இன்று எடியூரப்பா, அரசு இல்லமான காவிரியில் குடியேற திட்டமிட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.