கொரோனாவால் தடுமாறும் பெங்களூரின் 'குட்டி திருப்பூர்'.. அனைத்து நிறுவனங்களிலும் டெஸ்ட் கட்டாயம்
பெங்களூர்: பெங்களூர் நகரில் கொரோனா நோய்த்தொற்று மிக வேகமாக பரவி வரும் நிலையில், அதை தடுப்பதற்கு, ஒரு, புதிய முயற்சி எடுக்கப்பட்டு உள்ளது.
நிறுவனத்தில் பணியாற்றும் அனைவரிடமும் கொரோனா பரிசோதனையை கட்டாயப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
குறிப்பாக, தெற்கு பெங்களூரில் அமைந்துள்ள பொம்மனஹள்ளி மண்டலத்தில் முதல் முறையாக இது போன்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அட தங்கமே.. விமானம் இயங்காமல் இருந்ததால் இப்படி ஒரு நல்லது நடந்துச்சா.. பாருங்களேன்!
குட்டி திருப்பூர்
பொம்மனஹள்ளி மண்டலத்தில் அதிகப்படியான கார்மெண்ட்ஸ் தொழிற்சாலைகள் அமைந்துள்ளன. கிட்டத்தட்ட ஒரு குட்டி திருப்பூர் போல காணப்படுகிறது இந்த பகுதி. தெற்கு பெங்களூரில் உள்ள இந்த பகுதியில், 2016 மற்றும் 17 ஆம் ஆண்டு கர்நாடக மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் கணக்கீட்டுபடி, 901 பெரிய தொழிற்சாலைகளும், 1679 சிறிய தொழிற்சாலைகளும், 50 மத்தியதர தொழிற்சாலைகளும் இயங்குகின்றன.
தமிழர்கள் அதிகம்
கார்மெண்ட்ஸ் தொழிற்சாலைகளில் பெரும்பாலும் ஏழை எளிய மக்கள் அதிகம் பணியாற்றுகிறார்கள். இந்த பகுதியில் பரவலாக வசித்து வரும் தமிழர்கள் இந்த தொழிற்சாலைகளில் கணிசமாக இருக்கிறார்கள். குறிப்பாக, பாதிக்கு மேற்பட்டோர் பெண்கள் தான் வேலை பார்ப்பதே. அதிகப்படியான தொழிலாளர்கள் ஒரே இடத்தில் வேலை பார்ப்பதால் நோய்த்தொற்று கார்மெண்ட்ஸ் தொழிற்சாலையில் பணியாற்றுவோரிடம் வேகமாக பரவி வருகிறது. அவர்கள் மூலமாக அவர்கள் வசிக்கக்கூடிய பகுதிகளிலும், அவர் குடும்பத்தாருக்கும் இந்த நோய் பரவுகிறது. பொம்மனஹள்ளி மண்டலத்தில், பேகூர், வசந்தபுரா, பொம்மனஹள்ளி, சிங்கச்சந்திரா, உத்தரஹள்ளி ஆகிய 5-வார்டுகள் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன.
நோய் பரவல் அதிகம்
பொம்மனஹள்ளி மண்டலத்தில் கொரோனா நோய் பரவலை தடுப்பதற்காக சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டவர் தமிழகத்தை பூர்விகமாக கொண்ட கர்நாடக கேடர் ஐஏஎஸ் அதிகாரி மணிவண்ணன். இவர் கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக களத்தில் இறங்கி பணியாற்றிய போதிலும், கொரோனா வைரஸ் பரவல் என்பது குறைந்தபாடு கிடையாது. பெங்களூர் நகரில் கொரோனா பாசிட்டிவ் ரேட் 13 சதவீதம் என்ற அளவில் இருக்கிறது. பொம்மனஹள்ளி பகுதியில் இது 21 சதவீதம் என்ற அளவுக்கு அதிகமாக இருக்கிறது.
எதிர்ப்புகள்
இந்த நிலையில்தான், பொம்மனஹள்ளி மண்டலத்தில் உள்ள 16 வார்டுகளில் செயல்படும் அனைத்து நிறுவனங்களிலும் பணியாற்ற கூடிய அனைத்து ஊழியர்களுக்கும் கொரோனா பரிசோதனை எடுப்பது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. சில நிறுவனங்களின் ஊழியர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். இது தங்களது தனிப்பட்ட உரிமையை மீறும் செயல் என்கிறார்கள்.
நடவடிக்கை
இது தொடர்பாக, 'ஒன்இந்தியாவிடம்' பேசிய மணிவண்ணன் கூறுகையில், கொரோனா பரிசோதனைக்கு உட்படாத தொழிலாளர்கள் மீது தொழிலாளர் நலத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டி வரும். எனவே நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை, கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தவேண்டும். நோய் பாதிப்பு அடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை அளிப்பதற்காக மற்றும் அவர்கள் வீடு திரும்பும் வரை அவர்கள் கண்காணிப்பதற்கான நடவடிக்கையை எங்கள் குழு தொடர்ந்து எடுத்து வருகிறது, என்று தெரிவித்தார்.
மக்கள் நெருக்கம்
பொம்மனஹள்ளி மண்டலம் பகுதியில் மக்கள் நெருக்கம் மிக அதிகமாக இருக்கிறது. கார்மெண்ட்ஸ் தொழிற்சாலைகளும் அதிகமாக இருக்கிறது. இவ்விரு காரணங்களாலும் நோய் பரவல் வேகமாக இருப்பதால், இந்த மண்டலத்துக்கு சிறப்பு கவனம் செலுத்தவேண்டியது அவசியம் என்கிறார்கள் மருத்துவ துறை வல்லுநர்கள்.