காவிரி ஆற்றில் போட்டோ ஷூட் நடத்திய சசிகலா-சந்துரு தம்பதி.. படகு கவிழ்ந்து பெரும் சோகம்
பெங்களூரு: கர்நாடகா மாநிலம் மைசூருவில் நிச்சயதார்த்தம் ஆன இளம் தம்பதி படகில் அமர்ந்து போட்டோஷூட் நடத்திய போது ஆற்றில் மூழ்கி உயிரிழந்தனர்.
வாழ்வில் திருமண புகைப்படங்கள் காலத்திற்கும் பெயர் சொல்ல வேண்டும் என நினைக்கும் தம்பதிகள் அண்மைக்காலமாக வித்தியாசமான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள்.
குறிப்பாக திருமண நிச்சயதார்த்தம் முடிந்த பிறகு பல தம்பதியினர் மறக்க முடியாத அளவுக்கு தங்களது திருமண ஆல்பமும், திருமணத்திற்கு முந்தைய போட்டோ ஷூட்டும் இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள்.
புகைப்படங்கள்
ஆனால் அப்படி புகைப்படங்கள் நினைவுகளை பத்திரப்படுத்தவும் உணர்வு காலத்திற்கு பின்பு எழுப்ப வேண்டும் என்ற ஆசையில் சிலர் விபரீதமான முயற்சிகளை செய்கிறார்கள். அண்மையில் கேரளாவைச் சேர்ந்த பெண் ஆடையில்லாதது போன்ற எடுத்த போட்டோ ஷூட் ஈர்ப்பை பெற்றாலும் கடும் விமர்சனங்களை ஏற்படுத்தியது. அதேநேரம் ஒரு தம்பதி பாரதியார், செல்லம்மா வேடத்தில் உருவாக்கிய போட்டோ ஷூட் வரவேற்பை பெற்றது.
திருமண ஆல்பம்
இப்படி திருமணத்துக்கு முன், திருமணத்துக்கு பின் எடுக்கப்படும் புகைப்பட ஆல்பங்கள் சமூக வலைதளங்களில் தினசரி பேசுபொருளாகி வருகின்றன. இந்நிலையில் கர்நாடக மாநிலம் மைசூருவில் நிச்சயதார்த்தம் ஆன இளம் தம்பதி படகில் அமர்ந்து போட்டோஷூட் செய்தபோது காவிரி ஆற்றில் மூழ்கி உயிரிழந்தனர்.. இதனால் திருமண வீடே துக்கத்தில் மூழ்கி உள்ளது.
10 நாளில் திருமணம்
மைசூரு மாவட்டத்தில் உள்ள முதுகுத்தூரில் கடந்த வாரம் சசிகலா (20) மற்றும் சந்துரு (30) ஆகியோருக்கு கல்யாண நிச்சயார்த்தம் நடந்துள்ளது. வரும் 22ம் தேதி திருமணம் நடத்துவது என தேதி முடிவு செய்யப்பட்டது. சசிகலா சந்துரு தம்பதி திருமணத்திற்கு முன்பான போட்டோஷூட்டை காவிரி ஆற்றில் நடத்தியுள்ளனர்.
விபரீதமான போட்டோ ஷூட்
மீனவர் ஒருவருடன் படகில் அமர்ந்து போட்டோஷூட்டுக்கு தயாரானபோது தடுமாறி மூவரும் ஆற்றில் விழுந்தனர். மீனவர் பத்திரமாக நீந்தி கரையேறிய நிலையில் இளம் ஜோடி தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத்துறை இருவரின் உடல்களையும் மீட்டனர்