கேரளா டூ கர்நாடகா வருவோருக்கு கொரோனா சர்டிபிகேட் கட்டாயம்.. திடீர் உத்தரவு.. தமிழக பயணிகள் நிலை?
பெங்களூர்: கேரளாவில் இருந்து கர்நாடகா வரும் அனைவரும் ஆர்டி-பிசிஆர் கொரோனா பரிசோதனை சான்றிதழைக் காண்பிக்க வேண்டும் என்று கர்நாடக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
நாட்டிலேயே, மகாராஷ்டிரா மற்றும் கேரளாவில் மட்டும்தான் தற்போது கொரோனா நோய் பாதிப்பு கட்டுக்குள் இல்லாமல் சென்று கொண்டிருக்கிறது.
கர்நாடகா உள்ளிட்ட பிற மாநிலங்களில் நிலைமை கட்டுக்குள் இருக்கிறது. அதே நேரம் பெங்களூரில் ஒரு அப்பார்ட்மெண்ட் மற்றும் ஒரு கல்லூரியில் புதிதாக கொரோனா கிளஸ்டர் உருவாகி உள்ளது.
பெங்களூர் கிளஸ்டர்
அதாவது, ஒரே இடத்தில் நிறைய பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மீண்டும் டவுன் நடைமுறையை அறிமுகப்படுத்த வேண்டுமா என்று கர்நாடக அரசு யோசித்து வருவதாக கூறப்படுகிறது. அதேநேரம் பொருளாதார நடவடிக்கைகளுக்கு பாதிப்பு ஏற்படும் என்பதால் அந்த ஆயுதத்தை கையில் எடுக்க வேண்டாம் என்று அமைச்சர்கள் முதல்வர் எடியூரப்பாவுக்கு அறிவுறுத்தி உள்ளதாகவும் கூறப்படுகிறது.
ஆர்டி-பிசிஆர் பரிசோதனை
இந்த நிலையில்தான், கேரளாவிலிருந்து பெங்களூர் உட்பட கர்நாடகாவின் எந்த பகுதிக்கு வருபவர்களாக இருந்தாலும், 72 மணி நேரத்துக்கு உள்ளே எடுக்கப்பட்ட ஆர்டி-பிசிஆர் பரிசோதனை முடிவுகளை காட்ட வேண்டும், அதில் நெகட்டிவ் என்று இருந்தால் மட்டும்தான் கர்நாடகா உள்ளே அவர்கள் அனுமதிக்கப்படுவார்கள். இது மட்டுமின்றி கேரளாவிலிருந்து கர்நாடகா வருவோரை கண்காணிப்பதற்காக சிறப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது என்று கூடுதல் தலைமைச் செயலாளர் ஜாவித் அக்தர் தெரிவித்துள்ளார்.
கல்லூரி மாணவர்கள்
கேரளாவில் இருந்து வருபவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருப்பது உறுதி செய்யப்பட்டால், அவர்களது மாதிரிகள் பெங்களூர் நிமான்ஸ் மருத்துவமனை வளாகத்தில் உள்ள ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்படும். ஹோட்டல்கள் மற்றும் கல்லூரிகளில் தங்கியிருப்பவர்களை சந்திப்பதற்கு உறவினர்கள் அல்லது விசிட்டர்கள் அனுமதிக்கப்படமாட்டார்கள். அவர்களை சந்திக்க வேண்டும் என்றால் covid-19 நோடல் அதிகாரிகளின் அனுமதியை பெற வேண்டும். எந்தெந்த கல்லூரி மாணவர்களாவது, கேரளாவுக்கு சென்று வந்தாலும், அவர்கள் பெயர் பட்டியலை தயாரிக்க வேண்டும். ஒவ்வொரு முறை அவர்கள் கேரளா சென்று திரும்பும் போதும் அதற்கான சான்றிதழை வழங்க வேண்டும்.
தமிழக பயணிகள்
இதுதவிர, பிரிட்டன், பிரேசில் மற்றும் தென் ஆப்பிரிக்காவில் இருந்து கர்நாடகா வரும் விமான பயணிகள் ஆர்டி-பிசிஆர் சான்றிதழை வழங்க வேண்டும் என்றும் அரசு தெரிவித்துள்ளது. கேரளா மாநிலத்தில் இருந்து வருவோருக்கு மட்டுமல்லாது, மகாராஷ்டிரா, தமிழகம், ஆந்திரா உள்ளிட்ட அண்டை மாநில பயணிகளுக்கும் கர்நாடகா கட்டுப்பாடுகளை விதிக்குமா அல்லது கட்டுப்பாடுகளை விதிக்காதா என்பது அடுத்து வரும் நாட்களில் தெரியவரும். ஏனெனில் ஏற்கனவே தமிழக பயணிகளுக்கு கட்டுப்பாடு விதித்த மாநிலம்தான் கர்நாடகா. ஆனால் இப்போது தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாட்டில் இருப்பதால் அதற்கான வாய்ப்பு குறைவுதான். இருப்பினும், பெங்களூர் உள்ளிட்ட கர்நாடக நகரங்களுக்கு தமிழகத்தில் இருந்து பணிநிமித்தமாக வந்துவிட யோசிப்பவர்கள் விரைந்து வந்துவிடலாம் என்று யோசிக்கத் தொடங்கி உள்ளனர்.