சசிகலாவிற்கு சிடி ஸ்கேன் பரிசோதனை - விக்டோரியா மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்
உடல் நலக்குறைவினால் பாதிக்கப்பட்டுள்ள சசிகலாவிற்கு சிடி ஸ்கேன் பரிசோதனை செய்யப்படுகிறது.
பெங்களூரு: உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ள சசிகலா சிடி ஸ்கேன் பரிசோதனை செய்வதற்காக பௌரிங் மருத்துவமனையில் இருந்து விக்டோரியா மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார். சசிகலாவை கேரளா அல்லது புதுச்சேரியில் உள்ள மருத்துவமனைக்கு மாற்றி சிகிச்சை அளிக்க வேண்டும் என்று கர்நாடக மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் வழக்கறிஞர் ராஜராஜன் மனு அளித்துள்ளார்.
சசிகலாவிற்கு நடத்தப்பட்ட பரிசோதனையில், ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு சீராக இருப்பதாகவும், ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு 84 சதவீதமாக இருந்ததாகவும், இதனால்தான் மூச்சுத்திணறல் ஏற்பட்டதாகவும் தெரியவந்தது. எனவே அவருக்கு ஆக்சிஜன் செலுத்தி சிகிச்சை அளித்து வருவதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
சொத்து குவிப்பு வழக்கில் சிறை தண்டனை விதிக்கப்பட்ட சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், சசிகலாவின் தண்டனை காலம் முடிவடைவடைய உள்ளது. அவர் வருகிற 27ஆம் தேதி விடுதலை செய்யப்படுவார் என்று பெங்களூரு சிறை நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இந்நிலையில், நேற்று பெங்களூரு சிறையில் சசிகலாவுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனால், அவருக்கு முதல் கட்டமாக சிறை மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும், அவருக்கு மூச்சுத்திணறல் அதிகமாக இருந்ததால், நேற்று மாலை 5.45 மணியளவில் மேல் சிகிச்சைக்காக அவர் பெங்களூரு பவுரிங் அரசு மருத்துவமனையின் தண்டனை கைதிகளுக்கான வார்டில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு சசிகலாவிற்கு ஆன்டிஜென் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில், அவருக்கு கொரோனா தொற்று இல்லை என்பது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து அவருக்கு மருத்துவ பரிசோதனைகள் நடத்தப்பட்டன. இதில் ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு சீராக இருந்தது. எனினும், ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு 84 சதவீதமாக இருப்பதாகவும், இதனால்தான் மூச்சுத்திணறல் ஏற்பட்டதாகவும் தெரியவந்தது. எனவே அவருக்கு ஆக்சிஜன் செலுத்தி சிகிச்சை அளித்து வருவதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
சசிகலா அவசரசிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ரேபிட் பரிசோதனையிலும் அவருக்கு கொரோனா இல்லை என்று தெரியவந்துள்ளது ஆர்.டிபி.சி.ஆர். பரிசோதனையில் அவருக்கு கொரோனா இல்லை என்று தெரியவந்துள்ளது. இந்த நிலையில் இன்று காலையில் மீண்டும் மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதனால் கவலையடைந்த சசிகலாவின் உறவினர்கள், தனியார் மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளிக்க வேண்டும் என்றும், சி.டி ஸ்கேன் பரிசோதனை செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.
சசிகலாவிற்கு என்ன ஆச்சு... தவிக்கும் உறவுகள் சிகிச்சையிலும் மெத்தனம் என குற்றச்சாட்டு
இந்த நிலையில் பௌரிங் மருத்துவமனையில் இருந்து சசிகலா ஆம்புலன்ஸ் மூலம் விக்டோரியா மருத்துவமனைக்கு சிடி ஸ்கேன் பரிசோதனைக்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். அந்த பரிசோதனை முடிவுக்குப் பிறகு சசிகலாவிற்கு
சிகிச்சை அளிக்கப்படும் என்று மருத்துவமனை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன
ஜனவரி 27ஆம் சசிகலா விடுதலை ஆக இருந்த நிலையில் சசிகலாவிற்கு உடல்நலம் பாதிப்படைந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே சசிகலாவை கேரளா அல்லது புதுச்சேரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளிக்க வேண்டும் என்று வழக்கறிஞர் ராஜராஜன் என்பவர் கர்நாடாக மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் புகார் அளித்துள்ளார்.
சசிகலா விடுதலையாக இருந்த நிலையில் உடல் நிலை பாதிக்கப்பட்டிருப்பது சந்தேகத்தை ஏற்படுத்துவதாகவும் அவர் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார். எனவே பெங்களூருவில் இருந்து கேரளா மாநில மருத்துவமனைக்கோ அல்லது புதுச்சேரி மருத்துவமனைக்கோ சசிகலாவை இடமாற்றம் செய்ய வேண்டும் என்றும் வழக்கறிஞர் ராஜராஜன் கேட்டுக்கொண்டுள்ளார்.