கர்நாடகாவில் அதிர்ச்சி.. சாதியை காரணம்காட்டி ஊருக்குள் நுழைய தலித் எம்பிக்கு அனுமதி மறுப்பு
பெங்களூரு: கர்நாடகாவில் பட்டியலினத்தைச் சேர்ந்த எம்பி நாராயணசாமியை சாதியை காரணம் காட்டி ஊருக்குள் அனுமதிக்காத அவலம் நடந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கர்நாடகா மாநிலம் சித்தர துர்கா லோக்சபா தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் நாராயணசாமி. இவர் தனது தொகுதிக்குள் இருக்கும் பாவாகடா கிராமத்திற்கு மருத்துவர்கள் மற்றும் மருந்தக நிறுவன அதிகாரிகளுடன் நேற்று போயிருக்கிறார்.
அப்போது அந்த கிராமத்தில் வசிக்கும் குறிப்பிட்ட சமுதாய மக்கள், நாராயணசாமி எம்பியை எங்கள் கிராமத்திற்கு அனுமதிக்க முடியாது என்று தடுத்து நிறுத்தியுள்ளனர். பட்டியலின சாதியைச் சேர்ந்தவர் நாராயணசாமி என்றும் அவரை ஊருக்குள் அனுமதிக்க முடியாது என கிராம மக்கள் எதிர்த்துள்ளனர்.
அப்போது எம்பி நாராயணசாமிக்கும் கிராம மக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து எம்பி நாராயணசாமி அங்கிருந்து ஏமாற்றத்துடன் கிளம்பி சென்றார். இந்த விவகாரம் கர்நாடகாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மாவட்ட விரிவான எஸ்பி விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். எம்பியை கிராமத்திற்குள் நுழைய விடாமல் தடுத்தவர்கள் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த விவகாரம் தொடர்பாக கேள்விப்பட்டு கர்நாடக துணை முதல்வர் அஸ்வத் நாராயன் அதிர்ச்சி அடைந்ததுடன், கிராமத்திற்குள் நுழைவதற்கு எம்பிக்கே அனுமதி இல்லை என்றால் அது மிகவும் கண்டனத்திற்கு உரிய செயல் என்றார். இந்த விஷயத்தில் உறுதியாக தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் நாம் அனைவரும் சமம் என்றும் நமக்கு நடுவில் எந்தவித பாகுபாடும் இல்லை என்றும் துணை முதல்வர் அஸ்வத் நாராயன் தெரிவித்தார்.