தகுதி நீக்க எம்எல்ஏக்கள் 16 பேரை சேர்த்துக்கொண்ட பாஜக.. ஒருத்தரை மட்டும் சேர்க்கவில்லை
Recommended Video
பெங்களூரு: கர்நாடகாவில் தகுதிநீக்கம் செய்யப்பட்ட காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தளத்தைச் சேர்ந்த அதிருப்தி எம்எல்ஏக்கள் 16 பேர் முதல்வர் எடியூரப்பா முன்னிலையில் இன்று பாஜகவில் இணைந்தனர்
கர்நாடகாவில் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வரும் பொருட்டு தங்கள் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்த 17 பேரை கர்நாடகா முன்னாள் சபாநாயகர் ரமேஷ்குமார் தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டார்.
இதை எதிர்த்து அவர்கள் உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் நேற்று தீர்ப்பு அளிக்கப்பட்டது. அதில் 17 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்தது செல்லும் என்றும் அவர்கள் 17 பேரும் இடைத்தேர்தலில் போட்டியிட எந்த தடையும் இல்லை என்றும் உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில் குறிப்பிட்டது.
பாஜகவில் சேர விருப்பம்
இதையடுத்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்கள் அனைவரும் பாஜகவில் இணைய விருப்பம் தெரிவித்திருப்பதாகவும் அவர்கள் இன்று இணைவார்கள் என்றும் கர்நாடகா துணை முதல்வர் அவைத்நாராயணா நேற்று கூறியிருந்தார்.
பாஜகவில் சேர்ப்பு
இதன்படி இன்று காலை கர்நாடகா பாஜக அலுவலகத்தில் முதல்வர் எடியூரப்பா, மாநில பாஜக தலைவர் நளின்குமார் சுட்டீல், பாஜக மூத்த தலைவர் முரளிதர் ராவ் முன்னிலையில் காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தளத்தைச் சேர்ந்த அதிருப்தி எம்எல்ஏக்கள் 16 பேர் இணைந்தனர். அவர்களை பாஜக தலைவர்கள் வரவேற்றனர்.
பாஜக வேட்பாளர்கள்
இதனிடையே இடைத்தேர்தல் நடைபெறும் 15 தொகுதிகளில் பெரும்பான்மையை வெல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் உள்ள பாஜக, தகுதி நீக்கம் செய்யப்பட்டு இன்று கட்சியில் இணைந்தவர்களில் பெரும்பாலானோரை கட்சி வேட்பாளராக நிறுத்த வாய்ப்பு உள்ளது
பாஜக சேர்க்கவில்லை
மொத்தம் 17 பேரில் சிவாஜி நகர் தகுதி நீக்க எம்எல்ஏ ஆர்.ரோஷன் பெய்க் (காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்) மட்டும் இன்று பாஜகவில் சேரக்கப்படவில்லை. .ஐஎம்ஏ நிதிநிறுவன ஊழல் வழக்கை எதிர்க்கொண்டுள்ளதால் ரோஷன் பேக்கை மட்டும் பாஜக சேர்க்கவில்லை என்று தெரிகிறது.
ஆசைப்பட்டார்
முன்னதாக ஏழு முறை சட்டமன்ற உறுப்பினரான ரோஷன் பெய்க் புதன்கிழமை மற்ற சட்டமன்ற உறுப்பினர்களுடன் பாஜகவில் சேரப்போவதாகக் கூறியிருந்தார்.