ஒக்கலிகா வாக்குகளை ஒரேடியாக அள்ள காங். பலே வியூகம்.. கர்நாடகா தலைவராகிறார் சிவக்குமார்
பெங்களூரு: கர்நாடகா மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவராக முன்னாள் அமைச்சர் டி.கே. சிவக்குமார் நியமிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
கர்நாடகாவில் 15 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்தது. இத்தேர்தலில் 12 இடங்களில் பாஜக வென்றதன் மூலம் சட்டசபையில் பெரும்பான்மையை தக்க வைத்துக் கொண்டது.
இதனையடுத்து தேர்தல் தோல்விக்குப் பொறுப்பேற்று மாநில தலைவர் பதவியில் இருந்து தினேஸ் குண்டுராவ் ராஜினாமா செய்தார். இதுவரை கர்நாடகா காங்கிரஸ் தலைவர் பதவிக்கு யாரும் நியமிக்கப்படவில்லை.
இந்நிலையில் முன்னாள் அமைச்சர் சிவக்குமார், கர்நாடகா காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளன. அவருடன் செயல் தலைவராக எம்.பி. பாட்டீல் நியமிக்கப்படக் கூடும் என்றும் கூறப்படுகிறது. கர்நாடகா சட்டசபை குழுத் தலைவராக சித்தராமையா தொடருவார் என்கின்றன காங்கிரஸ் வட்டாரங்கள்.
கர்நாடகாவில் மட்டுமல்ல குஜராத் உள்ளிட்ட பிற மாநிலங்களிலும் காங்கிரஸ் கட்சிக்கு நெருக்கடி ஏற்பட்டபோது அதை லாவகமாக சமாளித்தவர் சிவக்குமார். கர்நாடகாவில் ஜேடிஎஸ்- காங்கிரஸ் கூட்டணி அரசு கவிழ்க்கப்பட்ட போது ஆட்சியைக் காப்பாற்ற பெரும் போராட்டத்தையே நடத்தினார் சிவக்குமார்.
இதனாலேயே மத்திய அரசால் கடும் நெருக்கடிகளை எதிர்கொண்டு சிறைவாசமும் அனுபவித்தார் சிவக்குமார். அவர் மட்டுமின்றி அவரது குடும்பமும் வருமாவரித்துறை, அமலாக்கத்துறை விசாரணைகளுக்கு அலைக்கழிக்கப்பட்டது. இது அவர் சார்ந்த ஒக்கலிகா சமூகத்தினரை பெரும் கொந்தளிப்புக்குள்ளாக்கியது.
சிவகுமாருக்கு ஆதரவாகவும் பாஜகவுக்கு எதிராகவும் பெங்களூருவில் ஒக்கலிகா சமூகத்தினர் நடத்திய பிரமாண்ட பேரணி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. கர்நாடகா அரசியலில் வெற்றி தோல்வியைத் தீர்மானிக்கக் கூடிய ஜாதிகளில் ஒக்கலிகா சமூகமும் முதன்மையானது. இப்போது அந்த சமூகத்தைச் சேர்ந்த சிவக்குமாரை மாநில கட்சித் தலைவராக்கினால் ஒக்கலிகா வாக்குகளை சிந்தாமல் சிதறாமல் கொண்டு வந்துவிடுவார் என மலைபோல் நம்பியே இம்முடிவை எடுக்கிறதாம் காங்கிரஸ்.