16 பேரில் ஒருவரை தக்க வைத்து கொண்ட காங்.. பெங்களூரில் சிவக்குமார் தகவல்
Recommended Video
பெங்களூர்: ராஜினாமா செய்த 16 எம்எல்ஏக்களில் ஒருவர் காங்கிரஸுக்கே மீண்டும் திரும்புவதாக உறுதியளித்துள்ளதாக அமைச்சர் டிகே சிவக்குமார் தெரிவித்துள்ளார்.
கர்நாடகத்தில் அமைச்சர் பதவி, முக்கிய இலாகா உள்ளிட்ட பிரச்சினைகளுக்காக குமாரசாமி ஆட்சியை கவிழ்க்க காங்கிரஸ்- மஜத எம்எல்ஏக்கள் முடிவு செய்து இதுவரை 13 காங்கிரஸ் எம்எல்ஏக்களும், 3 மஜத எம்எல்ஏக்களும் ராஜினாமா செய்தனர்.
இவர்களது ராஜினாமா கடிதத்தை சபாநாயகர் ரமேஷ்குமார் ஏற்றுக் கொள்ளவில்லை. இந்த நிலையில் தங்களது ராஜினாமா கடிதத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும் என உத்தரவிட கோரி உச்சநீதிமன்றத்தில் 10 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கில் 10 பேரின் ராஜினாமா கடிதங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் சபாநாயகருக்கு உத்தரவிட்டது. இந்த நிலையில் கடந்த வியாழக்கிழமை 10 பேரும் சபாநாயகரை சந்தித்து ராஜினாமா கடிதங்களை அளித்தனர். எனினும் 10 பேரிடமும் தனித்தனியாக விசாரணை நடத்திய பிறகே அதுகுறித்து முடிவெடுக்க முடியும் என்பதால் 17-ஆம் தேதி வரை நேரம் கேட்டுள்ளார் சபாநாயகர்.
இந்த நிலையில் விரைவில் கர்நாடக சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படலாம் என்பதால் அதிருப்தி எம்எல்ஏக்களை சமாதானம் செய்யும் முயற்சியில் அமைச்சர் சிவக்குமாரும் துணை முதல்வர் பரமேஸ்வராவும் ஈடுபட்டுள்ளனர்.
அதன்படி பெங்களூரில் உள்ள அமைச்சரும் ஹோட்கோட் எம்எல்ஏவுமான எம்டிபி நாகராஜனின் வீட்டுக்கே சென்று இருவரும் பேச்சுவார்த்தை நடத்தினர். இதுகுறித்து செய்தியாளர்களிடம் டிகே சிவக்குமார் கூறுகையில் ராஜினாமா செய்த எம்எல்ஏ நாகராஜ் மீண்டும் காங்கிரஸுக்கு வருவதாக உறுதி அளித்துள்ளனர் என்றார்.