டிகே சிவகுமார் மகளை திருமணம் செய்யும் கபே காபி டே நிறுவனர் சித்தார்த்தா மகன்! கோலாகல நிச்சயதார்த்தம்
பெங்களூர்: கர்நாடக காங்கிரஸ் கட்சி தலைவர் டிகே சிவகுமார் மகள் மற்றும் கபே காபி டே நிறுவனர், மறைந்த சித்தார்த்தாவின் மகன் ஆகியோருக்கு இடையே இன்று திருமண நிச்சயதார்த்தம் விமரிசையாக நடந்தது.
"கபே காபி டே" நிறுவனர் சித்தார்த்தா, 2019ம் ஆண்டு ஜூலை மாதம், தெற்கு கனரா மாவட்டத்தின், நேத்ராவதி நதியில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். அவர் கடன் பிரச்சினையால் நதியில் குதித்து தற்கொலை செய்து கொண்டதாக காவல்துறை தெரிவித்தது.
இந்த சம்பவம் நாடு முழுக்க பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
சித்தார்த்தா திடீர் தற்கொலை
இந்த சம்பவத்திற்கு முன்பே, டிகே சிவகுமாரின் மகள் ஐஸ்வர்யா மற்றும் சித்தார்த்தாவின் மகன் அமர்தியா ஹெக்டே ஆகியோர் இடையே திருமண நிச்சயம் செய்ய முடிவு செய்யப்பட்டிருந்தது. ஆனால், சித்தார்த்தாவின் திடீர் முடிவால் திருமண ஏற்பாடுகள் தள்ளிப்போயின.
ஓராண்டு தாமதம்
இரு வீட்டாரும் ஒக்கலிகர் ஜாதி பிரிவைச் சேர்ந்தவர்களாகும். அவர்கள் வழக்கப்படி, துக்கம் நடைபெற்ற வீட்டில் ஓராண்டுக்கு திருமணம் உள்ளிட்ட எந்த சுப நிகழ்ச்சியும் நடத்தக் கூடாது. எனவே, ஐஸ்வர்யா மற்றும் அமர்த்தியா ஹெக்டே ஆகியோரின் திருமண நிச்சயதார்த்தம், ஒரு நட்சத்திர ஹோட்டலில் இன்று நடைபெற்றது.
எஸ்.எம் கிருஷ்ணா பேரன்
சித்தார்த்தா வேறு யாருமல்ல, கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் முதல்வராக பதவி வகித்த எஸ்எம் கிருஷ்ணாவின் மகள் மாளவிகாவின் கணவர்தான் சித்தார்த்தா. தற்போது பாஜகவில் உள்ளார் எஸ்.எம்.கிருஷ்ணா. காபி டே பிஸினசை அமர்த்தியா கவனித்து வரும் நிலையில், ஐஸ்வர்யா, தனது தந்தையின் கல்லூரி நிர்வாகத்தை கவனித்து வருகிறார்.
உறவு பலம்
எஸ்எம் கிருஷ்ணா மற்றும் டிகே சிவகுமார் இடையே நல்ல உறவு இருந்து வரும் நிலையில், கிருஷ்ணா பேரன் மற்றும் சிவகுமார் மகள் ஆகியோரின் திருண பந்தம் அந்த உறவை மேலும் வலுப்படுத்தும் என்று எதிர்பார்க்கலாம்.
பிரமாண்ட திருமணம்
டிகே சிவகுமார் இந்த நிகழ்ச்சியை விமரிசையாக பெங்களூரிலுள்ள பேலஸ் கிரவுண்டில் நடத்த திட்டமிட்டிருந்தார். ஆனால் கொரோனா பிரச்சினையால், ஹோட்டலில் நடந்துள்ளது. ஆனால் இவ்விருவரின், திருமணம், அடுத்த ஆண்டு, பிப்ரவரி 19ம் தேதி, திருமணம் பேலஸ் கிரவுண்டில் விமரிசையாக நடக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.