21-ஆம் தேதி முதல் விக்ரம் லேண்டருக்கு என்ன நடக்கும் தெரியுமா? விஞ்ஞானிகள் கவலை
Recommended Video
பெங்களூர்: சூரிய ஒளியில் இயங்கும் தன்மை கொண்ட லேண்டரின் ஆயுட் காலம் இன்னும் 9 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் லேண்டருடனான தொடர்பை அதற்குள் பெறுவது சற்று கடினம் என கூறப்படுகிறது.
சந்திரயான் 2 விண்கலத்தில் ஆர்பிட்டர், லேண்டர், ரோவர் ஆகிய 3 அமைப்புகளை கொண்டது. இந்த நிலையில் தென் துருவத்தை ஆய்வு செய்ய அனுப்பப்பட்ட சந்திரயான் 2 விண்கலத்தில் இருந்த விக்ரம் லேண்டரானது கடந்த இரு தினங்களுக்கு முன்னர் நிலவில் தரையிறங்க இருந்தது.
ஆனால் தொழில்நுட்ப கோளாறு காரணமாக நிலவிலிருந்து 400 மீட்டர் உயரத்தில் இருந்த லேண்டரின் தொடர்பு துண்டிக்கப்பட்டது. இதனால் விஞ்ஞானிகள் சற்று தளர்வடைந்தனர். எனினும் நிலவை சுற்றி வரும் ஆர்பிட்டர், லேண்டரின் தகவல்களை சொல்லும் என நம்பிக்கையுடன் இருந்தனர்.
இஸ்ரோ
அந்த நம்பிக்கை வீண்போகவில்லை என்பதற்கேற்ப விக்ரம் லேண்டர் இருக்குமிடத்தை ஆர்பிட்டர் படம் பிடித்து அனுப்பியுள்ளது. இதனால் மகிழ்ச்சி அடைந்த இஸ்ரோ, லேண்டருடனான தொடர்பை பெற முயற்சித்து வருகிறது.
ரோவர்
இந்த நிலையில் லேண்டர் மற்றும் ரோவர் ஆகிய கருவிகள் இரண்டுமே சூரிய ஒளியில் இயங்கும் சோலார் பேனல்கள் வைக்கப்பட்டுள்ளன. இந்த 14 நாட்கள் மட்டுமே நிலவில் சூரிய வெளிச்சம் இருக்கும் என கூறப்படுகிறது. அதாவது வரும் 21-ஆம் தேதி முதல் நிலவில் இருள் சூழ்ந்துவிடும்.
சந்திரயான் 2
இதனால் அந்த கருவி ஸ்லீப் மோடுக்கு சென்றுவிடும். அதனுடனான தொடர்பை ஏற்படுத்திக் கொள்வது சிரமமாகும். ஆர்பிட்டரில் உள்ள உயர் ரக கேமராவானது சந்திரயான் 2 தரையிறங்கியதை படம் பிடித்து அனுப்பியுள்ளது.
உறைந்துவிடும்
எனினும் வேறு எந்த தகவலும் தெரியவில்லை. ஒரு வேளை செப்டம்பர் 20-ஆம் தேதிக்குள் லேண்டருடன் தொடர்பை ஏற்படுத்தாவிட்டால் நிலவில் இருள் ஏற்பட்டு சோலார் பேனல்கள் இயங்காது. மேலும் அங்கு குளிர் மைனஸ் 170 டிகிரி இருக்கும் என்பதால் லேண்டர் வாகனம் உறைந்துவிடும்.