கொரோனா பாதித்த டாக்டருக்கே இந்த நிலை.. அடுத்தடுத்து 3 ஆஸ்பத்திரி, உள்ளேயே சேர்க்கவில்லை.. பரிதாப பலி
பெங்களூர்: கொரோனாவுக்கு சிகிச்சையளித்து வந்த மருத்துவர் கொரோனாவால் உயிரிழந்துள்ளார். அவரை 3 தனியார் மருத்துவமனைகள் சிகிச்சைக்கு சேர்த்துக் கொள்ளாமல் திருப்பி அனுப்பி நான்காவது மருத்துவமனையில்தான் போராட்டத்திற்கு பிறகு சிகிச்சை அளிக்கப்பட்ட தகவல் வெளியாகியுள்ளது.
இந்த மோசமான ஒரு சம்பவம் பெங்களூர் நகரில் அரங்கேறியுள்ளது. போதிய ஆம்புலன்ஸ் வசதிகள் இல்லை என்பது உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளில் சிக்கி தவிக்கிறது பெங்களூர் நகரம். இதில் ஒரு மருத்துவருக்கு இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது பற்றிய புதிய தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
பெங்களூர் அடுத்த ராம்நகர் மாவட்டத்தில் கனகபுரா தாலுகா பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார மையத்தில் மருத்துவராக பணியாற்றியவர் மஞ்சுநாத் (50).
கொரோனாவை எப்படி தடுக்கிறார்கள் பாருங்க.. பெங்களூர் மாநகராட்சி செய்த வேலை.. அப்படியே ஷாக்கான மக்கள்
கொரோனா சிகிச்சை
அங்கு கொரொனா நோயாளிகளுக்கும் அவர் சிகிச்சை அளித்து வந்தார். இந்த நிலையில் இவரது குடும்பத்தை சேர்ந்த பலருக்கும், கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து கடந்த ஜூன் மாதம் 25ம் தேதி மஞ்சுநாத்துக்கு, அதிகமான காய்ச்சல் மற்றும் மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது. இதன் பிறகு நடைபெற்ற விஷயங்களை மஞ்சுநாத் மைத்துனர் நாகேந்திர குமார் என்பவர் நிருபர்களிடம் தெரிவித்தார்.
காய்ச்சல், மூச்சு திணறல்
பெங்களூர் மாநகராட்சியின் மருத்துவ அதிகாரியாக பணியாற்றுபவர் நாகேந்திர குமார். அவர் கூறியது இதுதான்: மஞ்சுநாத்துக்கு அதிகமான காய்ச்சல் மற்றும் மூச்சுத் திணறல் ஏற்பட்டதால் பரிசோதனைக்கு தனியார் ஆய்வகத்தில் மாதிரிகள் எடுக்கப்பட்டன. அந்த ஆய்வு முடிவு வெளியாகாத நிலையில், பெங்களூரில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக மஞ்சுநாதாவை சேர்க்க முயன்றோம்.
ஆய்வக முடிவு
மொத்தம் மூன்று மருத்துவமனைகளில் அடுத்தடுத்து இவரை சிகிச்சைக்காக சேர்த்துக்கொள்ளவில்லை. தனியார் ஆய்வகத்தின் முடிவு வெளியாகவில்லை என்று காரணம் கூறி சிகிச்சைக்கு படுக்கை வசதி அளிக்க மறுத்துவிட்டனர். நான்காவதாக குமாரசாமி லேஅவுட் பகுதியில் ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க மறுத்த போது எங்கள் குடும்பத்தினர் சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தினோம். இதன் பிறகுதான் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார்.
பிசியோதெரபிக்கு ஆளில்லை
ஆனால் நுரையீரல் போதிய அளவு விரிவடையவில்லை என்று கூறி அவருக்கு பிசியோதெரபி முறையில் சிகிச்சை அளிக்க மருத்துவர்கள் பரிந்துரை செய்தனர். ஆனால் பிசியோதெரபி செய்பவர்கள் யாருமே கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க முன்வரவில்லை. இதையடுத்து ஐசியூ சிகிச்சை வார்டில் மஞ்சுநாத் சிகிச்சை பெற்றார். வென்டிலேட்டர் பொருத்தப்பட்டிருந்தது.
டாக்டர் நிலைமை
பல்வேறு சிக்கல்கள் காரணமாக பெங்களூர் மருத்துவ கல்லூரி மற்றும் ஆராய்ச்சி இன்ஸ்டியூட் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு பலியாகிவிட்டார். அவரது மாமனார் இரண்டு தினங்களுக்கு முன்பு உயிரிழந்த நிலையில் மஞ்சுநாத் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளார். தொடர்ச்சியாக மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்க மறுத்தது இதற்கு ஒரு காரணம். இவ்வாறு நாகேந்திரகுமார் குற்றம்சாட்டினார். மஞ்சுநாதன் குடும்பத்தைச் சேர்ந்த 6 பேருக்கு கொரோனா வைரஸ் தாக்கம் ஏற்பட்டுள்ளது. கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கக்கூடிய மருத்துவர்களுக்கு கூட, உரிய சிகிச்சை அளிக்கும் வசதி பெங்களூர் போன்ற நகரத்தில் கூட செய்து கொடுக்கப்படவில்லை என்பது கர்நாடக அரசு மீதான அதிருப்தியை அதிகரித்துள்ளது.