ஆஸ்பத்திரிக்குள் நர்சுகளுடன் பதுங்கியிருந்த டாக்டர்.. கதவை உடைத்து நுழைந்த போலீஸ்.. காரணம் தெரியுமா?
பெங்களூர்: கொரோனா வைரஸ் நோயாளிக்கு சிகிச்சை அளித்த டாக்டர் மற்றும் நர்சுகள் மருத்துவமனைக்கு உள்ளேயே பூட்டிக்கொண்டு இருந்ததும், அதை கண்டுபிடித்து போலீசார் கதவை உடைத்து உள்ளே சென்று அவர்களை தூக்கி சென்று தனிமைப்படுத்தியதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தகவல் தொழில்நுட்ப தலைநகர் என்று அழைக்கப்படும் பெங்களூரில்தான், இப்படி ஒரு அதிர்ச்சிச் சம்பவம் அரங்கேறியுள்ளது.
தெற்கு பெங்களூரில் உள்ளது பொம்மனஹள்ளி. இந்த ஏரியாவுக்குள் அமைந்துள்ளது ஹொங்கசந்திரா என்ற பகுதி. இங்கு வேணு மருத்துவமனை என்ற பெயரில் டாக்டர் வேணுகோபால் என்பவர் மருத்துவமனை நடத்தி வந்தார்.
இங்கே நர்சுகள் சிலரும் பணியாற்றி வந்தனர். இந்த நிலையில்தான் சில நாட்களுக்கு முன்பாக ஹொங்கசந்திரா பகுதியைச் சேர்ந்த 54 வயதாகும் ஒரு கட்டிட தொழிலாளி, சுவாசப் பிரச்சினை தொடர்பாக இந்த மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு சென்றுள்ளார். இவர் பீகார் மாநிலத்தை சேர்ந்த புலம்பெயர்ந்த கட்டிட தொழிலாளியாகும்.
டாக்டர் வேணுகோபால் அவருக்கு சிகிச்சை அளித்து உள்ளார். ஆனால் குணமடைந்தபாடில்லை. எனவே ஜெயதேவா இருதய சிகிச்சை மருத்துவ மனைக்கு அந்த நோயாளியை அனுப்பி வைத்துள்ளார். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், இது இதயநோய் பாதிப்பு இல்லை என்பதை கண்டறிந்து விக்டோரியா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு கட்டிட தொழிலாளியை பரிசோதித்த டாக்டர்கள், கொரோனா வைரஸ் தொற்று அறிகுறி இருப்பதை கண்டு பிடித்துள்ளனர். மேலும் அவரை, ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு அனுப்பினர். அங்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் தொழிலாளிக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து, அவரை உடனடியாக விக்டோரியா மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். இந்த தகவல் தெரிந்ததும் டாக்டர் வேணுகோபால் மற்றும் அந்த மருத்துவமனையில் பணியாற்றிய நர்சுகள், மருத்துவமனையை பூட்டிக்கொண்டு உள்ளேயே தங்கி விட்டனர். அங்கே நோயாளிகள் தங்கி சிகிச்சை அளிக்க தேவையான வசதி இருப்பதால் அதை பயன்படுத்திக் கொண்டனர்.
கொரோனா வைரஸ் நோயாளிக்கு சிகிச்சை அளித்தது தெரியவந்தால் தங்களைத் தனிமைப் படுத்தி விடுவார்கள் என்ற பயத்தால் இவ்வாறு அவர்கள் செய்துள்ளனர். இந்த தகவல் கிடைத்ததும் மாவட்ட கலெக்டர் சிவமூர்த்தி உத்தரவின் பேரில் காவல்துறையினர் அங்கு சென்று கதவை உடைத்து டாக்டர் மற்றும் நர்சுகளை, சிவி ராமன் நகர் பகுதியில் உள்ள தனிமைப்படுத்தப்பட்ட பகுதிக்கு அழைத்துச் சென்று தங்க வைத்துள்ளனர்.
இந்த கட்டிட தொழிலாளி வசித்த பகுதி மக்கள் நெருக்கம் அதிகமாக இருக்கக்கூடிய பகுதியாகும். ஏழை, எளியவர்கள், சிறு சிறு வீடுகளில் நெருக்கமாக வாழும் பகுதியாகும். எனவே அவர் யார் யாரை தொடர்பு கொண்டார் என்று கேட்டறிந்து அவர்களை ஓட்டல் அறைகளில் தனிமைப்படுத்தி வைத்துள்ளது காவல்துறை. இதுவரை 15 தொடர்புகள் இவ்வாறு கண்டறியப்பட்டுள்ளனர்.
ஒரு மருத்துவராக இருந்தும், உண்மையை மறைத்ததற்காக வேணு மருத்துவமனையின் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக பெங்களூர் கலெக்டர் அறிவித்துள்ளார். டாக்டர் மற்றும் நர்சுகள், அரசுக்கு ஒத்துழைப்பு தராமல் தனிமைப்படுத்தலுக்கு அஞ்சி ஆஸ்பத்திரியை பூட்டிக்கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பொம்மனஹள்ளி பகுதிக்குள் செல்லும் வாகனங்கள் மற்றும் வெளியேறும் வாகனங்கள் தீவிர வாகனத் தணிக்கைக்கு உட்படுத்தப்படுகின்றன.
கடந்த 3 நாட்களாக பெங்களூரில் எங்கேயுமே கொரோனா பாதிப்பு கண்டுபிடிக்கப்படவில்லை. இந்த நிலையில், நேற்று ஹொங்கசந்திரா கட்டிட தொழிலாளி மற்றும் சிவாஜிநகரை சேர்ந்த நர்சு ஆகியோருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.