தேர்தல் ஆணைய விளம்பர தூதர் டிராவிட்தான்.. ஆனால் ஓட்டு மட்டும் இல்லை.. பின்னணி என்ன
Recommended Video
பெங்களூர்: கொடுமை, கொடுமை என்பார்களே அது இதுதான். தேர்தலுக்கான விளம்பர தூதராக இருந்த பிரபல முன்னாள் கிரிக்கெட் வீரர், ராகுல் டிராவிட்டுக்கு வாக்குரிமை கிடைக்காமல் போய்விட்டது. அது ஏன் என்பது தொடர்பான பின்னணி தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
கர்நாடக தலைநகர் பெங்களூரை பூர்வீகமாக கொண்டவர் ராகுல் டிராவிட். இந்திய கிரிக்கெட் அணியின் சுவர் என்று வர்ணிக்கப்பட்டவர். எந்த ஒரு போட்டியிலும் உணர்ச்சிகளை வெளிக்காட்டாமல் கடமையை மட்டுமே கண்ணும் கருத்துமாக செய்த வீரர்.
இதன் காரணமாக, சமுதாயத்தில் ராகுல் டிராவிட்டுக்கு நல்ல மதிப்பு உள்ளது. எனவேதான் கடந்த ஆண்டு நடைபெற்ற கர்நாடக சட்டசபை தேர்தலில் மக்களை வாக்களிக்க வரச் செய்வதற்காக, விளம்பர தூதராக தேர்தல் ஆணையம் ராகுல் டிராவிட்டை நியமித்திருந்தது.
ஏன் பாஜகவை ஆதரிக்கிறாய்? ஜடேஜாவிற்கு எதிராக குடும்பமே போர்க்கொடி.. காங்கிரசில் ஐக்கியம்
என்ன காரணம்
ஆனால் இந்த ஆண்டு, அதாவது, நாளை மறுநாள் நடைபெற உள்ள லோக்சபா தேர்தலில், ராகுல் டிராவிட்டால் வாக்களிக்க முடியாது என்பது வேதனையான முரண்தானே. ஏன் இப்படி ஒரு குழப்பம் நிகழ்ந்தது? என்பது குறித்த தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.
ஏரியா மாறிய டிராவிட்
ராகுல் டிராவிட் தனது குடும்பத்துடன் நீண்ட காலமாக பெங்களூர் மத்திய தொகுதிக்கு உட்பட்ட இந்திராநகர் பகுதியில் வசித்து வந்தார். ஆனால், சமீபத்தில் அவர் பெங்களூர் வடக்கு தொகுதிக்கு உட்பட்ட அஸ்வத் நகர் என்ற பகுதிக்கு இடம் பெயர்ந்துள்ளார். இதையடுத்து இந்திரா நகர் முகவரியிலிருந்து, ராகுல் டிராவிட்டின் பெயரை நீக்குவதற்கான விண்ணப்பத்தை அவரது சகோதரர் தேர்தல் அதிகாரிகளிடம் ஏற்கனவே சமர்ப்பித்திருந்தார். இதன் அடிப்படையில் இந்திராநகர் முகவரியிலிருந்து ராகுல் டிராவிட்டின் பெயர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டு விட்டது.
வெளிநாடு சுற்றுப் பயணம்
இதனிடையே புதிய முகவரிக்கு சென்ற பிறகு வாக்காளர் அடையாள அட்டை கேட்டு, ராகுல் டிராவிட் பெயர் பதிவு செய்வதற்காக விண்ணப்பிக்கவில்லை. அடிக்கடி, வெளிநாடு சுற்றுப் பயணத்தில் ராகுல் டிராவிட் உள்ள நிலையில், அவரால் குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் வாக்காளர் அடையாள அட்டை கேட்டு விண்ணப்பிக்க முடியவில்லை.
வாக்காளர் அடையாள அட்டை
இந்த நிலையில், எந்த ஒரு தொகுதியிலும், ராகுல் டிராவிட்டிற்கு, தற்போது வாக்காளர் அடையாள அட்டை இல்லாத சூழ்நிலை உள்ளது. எனவே, இந்த லோக்சபா தேர்தலில் ராகுல் டிராவிட் தனது ஓட்டை பதிவு செய்ய முடியாது. கர்நாடக கிரிக்கெட் சங்க வட்டார தகவல்படி, தற்போது ராகுல் டிராவிட் ஸ்பெயின் நாட்டில் உள்ளாராம்.