தேர்தல் செலவை குறைத்து காட்டிய வேட்பாளர்கள்... தேர்தல் ஆணையம் நோட்டீஸ்
பெங்களூர்: கர்நாடகாவில் நாடாளுமன்றத் தேர்தலில், வேட்பாளர்கள் சிலர் அவர்களின் தேர்தல் செலவு கணக்கை குறைவாக காட்டியுள்ளதாக விளக்கம் கேட்டு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
கடந்த 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலை விட இம்முறை தேர்தல் களத்தில் அதிகளவில் பணம் பிடிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இந்தநிலையில், கர்நாடகா மக்களவைத் தேர்தலில் போட்டியிட்ட, வேட்பாளர்கள் தங்களின் செலவு கணக்குகளை தாக்கல் செய்தனர். அதில், மிகவும் குறைந்த தொகையை தாக்கல் செய்துள்ளது தெரியவந்துள்ளது. தேர்தல் ஆணையத்தின் விதிப்படி, தொகுதிக்கு வேட்பாளர்கள் 70 லட்சம் செலவு செய்யலாம் என நிர்ணயித்துள்ளது.
குறிப்பாக, பாஜக வேட்பாளர் தேவேந்திரப்பா வெறும் 4,64 லட்ச ரூபாய் செலவு செய்துள்ளனர். அதே போல, காங்கிரஸ் கட்சியின் உகுரப்பா 6.58 லட்ச ரூபாய் தேர்தல் செலவாக தாக்கல் செய்துள்ளார். அதிகபட்சமாக ஹவேரி தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சியின் டி.ஆர்.பாட்டில் 59.8 லட்சம் ரூபாய் தேர்தலுக்காக செலவு செய்துள்ளார்.
மேலும், தேவகவுடா தேர்தல் செலவாக, ரூ.36 லட்சத்தை தாக்கல் செய்துள்ளார். ஆனால், தேர்தல் ஆணையத்தின் மாதிரி செலவு கணக்குபடி அவர், 56 லட்சம் ரூபாய் செலவு செய்துள்ளார். இதுகுறித்தும் விளக்கம் கேட்டு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
மாண்டியா தொகுதியில் போட்டியிட்ட முதலமைச்சர் குமாரசாமியின் மகன் நிகில் ரூ.39 லட்ச ரூபாயை தேர்தல் செலவாக காட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது. கர்நாடகாவை போன்று, மற்ற மாநிலங்களின் வேட்பாளர்களையும், தேர்தல் ஆணையம் கண்காணித்து வருவதாக கூறப்பட்டுள்ளது.