15 நாள் பரோல் கேட்கிறார் இளவரசி... பெங்களூர் சிறைக்கு போனபிறகு முதல்முறையாக கோரிக்கை!
பெங்களூர்: சொத்துக் குவிப்பு வழக்கில் பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறையில் இருக்கும் இளவரசி 15 நாட்கள் பரோல் கேட்டு விண்ணப்பித்துள்ளார்.
சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு பெங்களூர் நீதிமன்றம் 4 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து 4 பேரும் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.
இதனிடையே அப்பல்லோ மருத்துவமனையில் உடல்நல குறைவால் அனுமதிக்கப்பட்டிருந்த ஜெயலலிதா திடீரென உயிரிழந்தார். இதைத் தொடர்ந்து கடந்த 2017-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் பெங்களூர் நீதிமன்ற நீதிபதி குன்ஹா தீர்ப்பை உச்சநீதிமன்றம் உறுதி செய்தது.
இதையடுத்து சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டனர். அங்கு சென்ற சிறிது மாதங்களிலேயே இளவரசிக்கு உடல்நிலை சரியில்லை என சிறை வளாக மருத்துவமனையில் சிகிச்சை அளித்தனர்.
இந்நிலையில் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டுள்ள சகோதரரை பார்க்க இளவரசி 15 நாட்கள் பரோல் கேட்டு விண்ணப்பித்துள்ளார். இந்த பரோல் மனு ஆய்வில் உள்ளதாக பெங்களூர் சிறை துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.
சிறைக்கு சென்று ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாகியுள்ள நிலையில் முதல் முறையாக இளவரசி பரோல் கேட்டுள்ளார். சசிகலாவும் அவரது கணவர் நடராஜன் காலமானதை அடுத்து இறுதி சடங்கில் பங்கேற்க கடந்த மார்ச் மாதம் 15 நாட்கள் பரோல் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.