கர்நாடகாவில் 15 தொகுதிக்கு புதிய தேதியில் இடைத்தேர்தல்.. தேர்தல் ஆணையம் அதிரடி அறிவிப்பு
பெங்களூரு: கர்நாடகாவில் 15 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அக்டோபர் 21ம் தேதி நடப்பதாக இருந்த நிலையில் டிசம்பர் 5 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
கர்நாடகாவில் குமாரசாமி தலைமையில் நடைபெற்ற காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி ஆட்சியே, கவிழும் வகையில் அடுத்தடுத்து 17 ஆளும் கட்சி எம்எல்ஏக்கள் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்தனர்.
பெரும்பான்மை நிரூபிக்க முடியாமல் கூட்டணி அரசு கவிழ்ந்தது. இதுதொடர்பாக ஆளுங்கட்சியினர் அளித்த புகாரை பரிசீலித்த, அப்போதைய சபாநாயகர் ரமேஷ்குமார், ராஜினாமா செய்த 17 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்தார். இந்த சட்டசபையின் பதவி காலம் இருக்கும் வரை அவர்கள் எந்த தேர்தலிலும் போட்டியிட முடியாது என்றும் உத்தரவிட்டார்.
இடைத்தேர்தல் அறிவிப்பு
சபாநாயகர் உத்தரவை எதிர்த்து 17 பேரும் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்த நிலையில் சமீபத்தில் இதில் 15 தொகுதிகளுக்கு மட்டும், அக்டோபர் 21 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. எனவே அந்த 15 தொகுதிகளிலும் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு தற்போது தகுதி நீக்கத்திற்கு உள்ளாகியுள்ள முன்னாள் எம்எல்ஏக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
தேர்தலை ஒத்திவையுங்கள்
உடனடியாக இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடர்ந்தனர். இடைத் தேர்தலில் தங்களை போட்டியிட அனுமதிக்க வேண்டும் அல்லது இடைத்தேர்தலை நாங்கள் தாக்கல் செய்துள்ள முக்கிய வழக்கில் தீர்ப்பு வரும்வரை நடத்தக்கூடாது என்று கேட்டுக் கொண்டனர்.
தேர்தல் ஆணையம் சம்மதம்
இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கின் விசாரணை முடிவடையாததால் தேர்தலை ஒத்திவைக்க முடியுமா? என தேர்தல் ஆணையத்திடம் உச்ச நீதிமன்றம் கேட்டது. அதைத்தொடர்ந்து, கர்நாடகா இடைத்தேர்தலை ஒத்திவைப்பதாக இந்திய தேர்தல் ஆணையம் உச்ச நீதிமன்றத்தில் அறிவித்தது. இதையடுத்து இந்த வழக்கின் விசாரணையை அக்டோபர் மாதம் 22ம் தேதிக்கு ஒத்திவைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
டிச.5க்கு தேர்தல் மாற்றம்
நேற்று உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்த படி இந்திய தேர்தல் ஆணையம் கர்நாடகாவில் 15 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்லை அக்டோபர் 21ம் தேதியில் இருந்து டிசம்பர் 5 ஆம் தேதிக்கு மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளது. மேலும் வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 9ம் தேதி நடைபெறும் என்றும் அறிவித்துள்ளது.