கர்நாடகாவில் 2 தொகுதிகளுக்கு மட்டும் இடைத் தேர்தல் அறிவிக்காத தேர்தல் ஆணையம்.. பின்னணி இதுதான்
பெங்களூர்: கர்நாடகாவில் 17 எம்எல்ஏக்களை, முந்தைய சபாநாயகர் ரமேஷ் குமார் தகுதிநீக்கம் செய்திருந்த நிலையில், அதில் 15 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் இன்று அறிவித்துள்ளது.
அக்டோபர் 21ம் தேதி இந்த 15 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடைபெற்று, அக்டோபர் 24-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை வெளியாக உள்ளது.
கர்நாடகாவில் நடைபெற்ற காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிகள் கூட்டணி அரசுக்கு, கொடுத்து வந்த ஆதரவை வாபஸ் பெற்று அதன் மூலம் ஆட்சி கலைப்புக்கு உறுதுணையாக இருந்ததாக கூறி 17 எம்எல்ஏக்களை, அப்போதைய, சபாநாயகர் ரமேஷ்குமார் தகுதி நீக்கம் செய்திருந்தார்.
இருப்பினும் பெங்களூரு நகரில் உள்ள ராஜராஜேஸ்வரி நகர் மற்றும் ரெய்ச்சூர் மாவட்டத்திலுள்ள மஸ்கி ஆகிய இரு தொகுதிகளுக்கும் தேர்தல் தேதி அறிவிக்கப் படவில்லை.
கடந்த பொதுத் தேர்தலின்போது இந்த தொகுதிகளில் முறையே காங்கிரஸ் வேட்பாளர்கள் முனிரத்னா, மற்றும் பிரதாப் கவுடா பாட்டில் ஆகியோர் வெற்றி பெற்றிருந்தனர்.
இதில் ராஜராஜேஸ்வரி நகரில் ஏராளமான போலி வாக்காளர் அடையாள அட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதை எதிர்த்து பாஜக வேட்பாளர் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இதேபோல மஸ்கி, தொகுதியில், மிகச் சொற்ப வாக்கு எண்ணிக்கையில் தான் பிரதாப் கவுடா பாட்டீல் வெற்றி பெற்றிருந்தார்.
இதை எதிர்த்து அந்த தொகுதி, பாஜக வேட்பாளர் கர்நாடகா ஹைகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். இவ்விரு வழக்குகளும் நிலுவையில் இருப்பதால் இந்த இரு தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெறவில்லை என்று கூறப்படுகிறது.
இதனிடையே தங்களை தகுதி நீக்கம் செய்தது செல்லாது என்று உச்சநீதிமன்றத்தில் தகுதிநீக்கத்திற்கு உள்ளான, எம்எல்ஏக்கள் வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்த நிலையில் தேர்தல் ஆணையம் 15 தொகுதிகளுக்கு தேர்தல் அறிவித்துள்ளது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றம் செல்ல அவர்கள் திட்டமிட்டுள்ளனர்.