1 வருடத்தில் 3வது முறையாக மின் கட்டணம் உயர்வு.. தமிழ்நாட்டில் இல்லைங்க கர்நாடகாவில்! கொதித்த மக்கள்!
பெங்களூர்: கர்நாடகாவில் மூன்றாவது முறையாக இந்த வருடம் மின் கட்டணம் உயர்த்தப்பட உள்ளது. மக்கள் இடையே கடுமையான விமர்சனங்களை இது சந்தித்து உள்ளது.
கடந்த சில வாரங்களுக்கு முன் தமிழ்நாட்டில் மின் கட்டணங்களில் மாற்றம் செய்யப்பட்டது. இந்த புதிய மின் கட்டணம் இந்த மாதம் அமலுக்கு வந்தது. மத்திய அரசு கொடுத்த அழுத்தம் காரணமாக இந்த மின் கட்டணம் உயர்த்தப்பட்டு உள்ளதாக மாநில அரசு தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் செய்யப்பட்டுள்ள மின் கட்டண திருத்தம் காரணமாக, 100 யூனிட் இலவச மின்சாரம் தொடர்ந்து வழங்கப்படும். ஏழை மக்கள் இதனால் பாதிக்கப்பட மாட்டார்கள் என்று செந்தில் பாலாஜி தனது பேட்டியில் குறிப்பிட்டு உள்ளார். மொத்தம் 2.30 கோடி மின் இணைப்புகள் தமிழ்நாட்டில் உள்ளன.
இதில் 1 கோடி மக்களுக்கு எந்த பாதிப்பும் இதனால் இருக்காது. 42 விழுக்காடு மின் இணைப்புதாரர்களுக்கு எந்த மாற்றமும் செய்யப்படவில்லை
மின் வாரிய கட்டண உயர்வு.. பொதுமக்களே ஏத்துக்கிட்டாங்க.. அப்புறம் என்ன.. செந்தில் பாலாஜி
மின் கட்டணம்
மத்திய மின் வாரியத்துறை தொடர்ந்து கடிதம் அனுப்பியதால், மின் மானியத்தை தடுத்து விடுவோம் என்று கூறியதால், கட்டணத்தை உயர்த்தி உள்ளதாக மின் வாரியத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.தமிழ்நாட்டில் இப்படி மின் கட்டணம் உயர்த்தப்பட்டதை பாஜக கடுமையாக விமர்சனம் செய்தது. பாஜக கூட்டணியில் உள்ள அதிமுகவும் இதை கடுமையாக விமர்சனம் செய்து பேட்டிகள் கொடுத்தது. இந்த நிலையில்தான் பாஜக ஆளும் கர்நாடகாவில் மூன்றாவது முறையாக மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ள செய்தி வெளியாகி உள்ளது.
பாஜக
பாஜக ஆளும் கர்நாடகாவில் மின்கட்டணம் 43 பைசா உயர்த்தப்பட்டு உள்ளது. மின்வாரியத்தின் கூடுதல் செலவினங்களை கட்டுப்படுத்த வேண்டும் என்று மின் கட்டணம் உயர்த்தப்பட்டு உள்ளது. கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்து அங்கு மின் கட்டணம் தொடர்ந்து உயர்த்தப்பட்டு வருகிறது. முதலில் 35 பைசா மின் கட்டணம் உயர்த்தப்பட்டது. அதன்பின் மீண்டும் 35 பைசா மின் கட்டணம் உயர்த்தப்பட்டது. இது ஒரு யூனிட்டிற்கான மின் கட்டண உயர்வு ஆகும்.
ஒரு யூனிட்
ஒரு யூனிட்டிற்கு பார்க்கும் போது இது குறைவான உயர்வாக தெரிந்தாலும் மொத்தமாக வரும் பில்லில் கட்டணம் அதிகமாகவே இருக்கும். உதாரணமாக தமிழ்நாட்டில் உள்ளது போல கர்நாடகாவில் 100 யூனிட் மின்சாரம் இலவசம் கிடையாது. அங்கு இலவச மின்சாரம் இல்லாத காரணத்தால் எல்லா யூனிட்டிற்கும் அவர்கள் கட்டணம் செலுத்த வேண்டும். இதன் காரணமாக அங்கு 50 யூனிட் மின்சாரத்திற்கு 540 ரூபாய் வரை மின் கட்டணம் வரலாம். இந்த நிலையில் கடந்த 3 மின் கட்டண உயர்வுகள் காரணமாக மின் கட்டணம் ரூபாய் 36 வரை உயரும்.
அதிகம் உயரும்
அங்கு சராசரியாக ஒவ்வொரு வீடுகளும் 100 யூனிட் வரை மின்சாரத்தை பயன்படுத்துவதாக கூறப்படுகிறது. இவர்களுக்கு மின் கட்டணம் 72 ரூபாய் வரை உயரும் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் தமிழ்நாட்டில் , 100 யூனிட் இலவச மின்சாரம் தொடர்ந்து வழங்கப்படும். கர்நாடகாவில் உயர்த்தப்பட்டு வரும் மின் கட்டணம் அம்மாநில மக்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தொடர்ந்து மூன்றாவது முறையாக இப்படி மின்கட்டணம் உயர்த்தப்பட்டதை பார்த்து மக்கள்ம் அம்மாநில அரசுக்கு எதிராக கொதித்து போய் இருக்கிறார்கள்.