மங்களூர் துப்பாக்கிச் சூடு.. கர்நாடகா உள்துறை அமைச்சரை உடனே பதவி நீக்க குமாரசாமி கோரிக்கை
பெங்களூர்: மங்களூர் துப்பாக்கிச் சூடு நடத்தியது தொடர்பாக கர்நாடகா உள்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மையை உடனே பதவி நீக்க வேண்டும் என முன்னாள் முதல்வர் குமாரசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.
குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கர்நாடகாவில் இந்த போராட்டம் தீவிரமடைந்துள்ளது.
இந்த நிலையில் கர்நாடகா மங்களூரில் கடந்த 19-ஆம் தேதி நடைபெற்ற போராட்டத்தில் போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இருவர் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது. நவ்ஷீன்(23) மற்றும் ஜலீல் (49) ஆகியோ இந்த துப்பாக்கிச் சூட்டில் பலியாகியுள்ளனர்.
இது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. அது போல் வரலாற்றாசிரியர் போராட்டம் நடத்திய போது அவரை போலீஸார் வலுக்கட்டாயமாக பிடித்து இழுத்து கைது செய்தனர். இதையடுத்து மங்களூருக்கு முன்னாள் முதல்வர் குமாரசாமி வருதை தந்தார்.
அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில் மங்களூர் துப்பாக்கிச் சூடு குறித்து போலீஸ் கமிஷனர் ஹர்ஷா பொய்யான தகவல்களை கூறியுள்ளார். உண்ணையும், சரியான தகவல்களும் மறைக்கப்பட்டன. இறந்த இருவரும் குற்றவாளிகள் என கூறி அவர்கள் மீது எப்படி வழக்கு பதியலாம்?
நடந்தது குறித்து எடியூரப்பா இதுவரை வருத்தம் ஏதும் தெரிவிக்கவில்லை. ஒரு மரியாதைக்கு கூட தாங்கள் செய்தது தவறு என்பதை அவர்கள் ஒப்புக் கொள்ளவில்லை. இருவர் தங்கள் பிள்ளைகளை இழந்துள்ளார். அவர்களின் இழப்புக்கு என்ன பதில்?
உள்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மையை உடனடியாக அமைச்சரவையிலிருந்து நீக்க வேண்டும். அது போல் துப்பாக்கிச் சூட்டை நடத்திய அதிகாரிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.
மங்களூர் வன்முறையில் இறந்த இருவருக்கு தலா ரூ 10 லட்சம் இழப்பீடு.. முதல்வர் எடியூரப்பா அறிவிப்பு