பெங்களூரில் இரவு 10 டூ 5 மணிவரை வீட்டை விட்டு வெளியே வர கூடாது.. தீயாய் பரவும் மெசேஜ்.. நிஜம் என்ன?
பெங்களூர்: இரவு 10 மணி முதல், அதிகாலை 5 மணிக்குள் கொரோனா வைரஸை ஒழிக்கக்கக்கூடிய மருந்தை பெங்களூர் முழுக்க தெளிக்க போகிறோம் என்று மாநகராட்சி சார்பில் அறிவித்தது போல பரவிய வாட்ஸ்அப் செய்தி வதந்தி என்று உறுதி செய்யப்பட்டது.
கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரக் கூடிய மாநிலங்களில் கர்நாடகாவும் ஒன்று. இங்கு தலைநகர் பெங்களூரில் இன்று ஒரே நாளில் 3 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது தெரிய வந்தது. மொத்தம் 14 பேர் இந்த மாநிலத்தில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இந்த நிலையில் வாட்ஸ்அப் வதந்தி ஒன்று வேகமாக பரவி வருகிறது. அதில் பெருநகர மாநகராட்சி அதிகாரிகள் சார்பில் வெளியிடப்பட்டது போன்ற தகவல்கள் இவ்வாறு கூறுகிறது:
மாலை வணக்கம்! இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை யாருமே வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம். ஏனெனில் கொரோனா வைரசுக்கு எதிரான மருந்து ஸ்பிரே செய்யப்பட உள்ளது. உங்களது நண்பர்கள், உறவினர்கள் மற்றும் குடும்பத்தாருக்கு இந்த தகவலை பகிருங்கள். இவ்வாறு அந்த மெசேஜ் சொல்கிறது. இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் வட்டாரத்தில் விசாரித்தபோது, இந்த தகவலில் உண்மை இல்லை. இதுவரை வைரஸுக்கு எதிரான எந்த மருந்தும் கண்டுபிடிக்கப்படவில்லை. பெங்களூர் மாநகராட்சியில் அவ்வாறு எந்த ஒரு தெளிப்பானும் பயன்படுத்தவில்லை என்று விளக்கம் அளித்துள்ளனர்.