கொரோனா தடுப்பூசி போடாமலே சும்மா நடித்தார்களா டாக்டர்கள்? வைரலான வீடியோ.. விசாரிச்சா மேட்டரே வேற
பெங்களூர்: கையில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்வதை போல போட்டோவுக்கு போஸ் கொடுத்ததாக ஒரு வீடியோ வைரலாக பரவியதே. அது விஷயமே வேறு என்கிறார்கள்.
Recommended Video
சம்மந்தப்பட்ட மருத்துவர்களை பத்திரிக்கையாளர்கள் தொடர்பு கொண்டு கேட்டபோது, பின்னணி தகவல் என்ன என்பது தெரியவந்துள்ளது.
கர்நாடக மாநிலம் தும்கூர் மாவட்ட சுகாதார அலுவலர் அலுவலகத்தில் கடந்த 16ம் தேதி கொரோனா தடுப்பூசி முகாம் நடந்தது.
அந்த முகாமில் மருத்துவர்களும் பங்கேற்று ஊசி போடுவார்கள் என்று அறிவிக்கப்பட்டது. இதையடுத்து ஊடகத்தினர் அங்கு குவிந்தனர்.
ஊசி போட்டது போல வீடியோ
மருத்துவர்கள் ஊசி போட்டபோது, அது போட்டோ மற்றும் வீடியோவாக படம் எடுக்கப்பட்டது. அப்போது நர்ஸ் ஊசியை மருத்துவரின் கை அருகே கொண்டு சென்றுவிட்டு பின்னால் எடுத்துவிட்டார். ஒரு பெண் டாக்டர் மற்றொரு ஆண் டாக்டர் ஆகியோர் இவ்வாறு போட்டோவுக்கு போஸ் கொடுத்ததாக கூறி வீடியோ வைரலானது.
WTF is happening here 😱😱#JumlePeJumla pic.twitter.com/GP8yljXSBV
— 𝖀𝖓𝖎𝖈💞𝖗𝖓 (@snapnchat) January 21, 2021
பொங்கிய நெட்டிசன்கள்
பாருங்க.. மக்களை ஏமாற்றுறாங்க.. ஊசியே போடாவில்லை. தடுப்பூசி மேல டாக்டர்களுக்கே பயம். அதனால்தான் இப்படி செய்துள்ளார்கள்.. என்றெல்லாம் வாட்ஸ்அப் உள்ளிட்ட பல்வேறு சமூக வலைத்தளங்களில் அந்த வீடியோவில் தங்கள் கருத்துக்களை சேர்த்து பரப்பினர் நெட்டிசன்.
மேட்டரே வேற
ஆனால் விஷயம் வேறு என்பது இப்போது தெரியவந்துள்ளது. தும்கூர் மாவட்ட சுகாதார அதிகாரி நாகேந்திரப்பாவிடம் நிருபர்கள் இதுகுறித்து கேட்டனர். அவர் விளக்கம் அளித்துள்ளார். நானும், பெண் டாக்டரும் 16ம் தேதி தனி அறையில் தடுப்பூசி போட்டுக் கொண்டோம். ஆனால் மீடியாக்கள் எங்களிடம் போட்டோவுக்கு போஸ் தேவை என்பதால், ஊசி போட்டுக் கொள்வதை போல போஸ் கொடுங்க என கேட்டனர். எனவே அதன்படி மீடியாவுக்கு போஸ் கொடுத்தோம். ஆனால் மீடியாவில் வெளியான வீடியோவை தனியாக கட் செய்து, சமூக வலைத்தளத்தில், தங்கள் சொந்தக் கருத்துக்களோடு பரப்பி வருகிறார்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
போலி தகவல்
இந்த விவகாரம் தொடர்பாக சுகாதாரத்துறை உயர் அதிகாரிகளுக்கு விளக்கம் அளித்துள்ளதாகவும் நாகேந்திரப்பா, தெரிவித்தார். தடுப்பூசி போட்டுக் கொண்ட பெண் டாக்டரான ரஜனி அளித்த பேட்டியில், தவறான கருத்தோடு வீடியோ வைரலானதால் நாங்கள் கிண்டலுக்கு உள்ளாக்கப்படுகிறோம். போட்டோவுக்கு போஸ் கொடுக்க நிருபர்கள் கேட்டதால் அது போஸ் கொடுக்கும் நோக்கத்தோடு நிகழ்த்தப்பட்ட ஒரு செய்தியாளர் சந்திப்பு. தடுப்பூசி போட்டதாக ஏமாற்ற எங்களுக்கு அவசியம் இல்லை. ஏற்கனவே தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளோம் என்றார்.