போலீஸ் அதிகாரிகள் போட்டோ.. பேஸ்புக்கில் அக்கவுண்ட்.. பழைய கார், பைக் வாங்குவோரிடம் மோசடி.. அப்பப்பா!
பெங்களூர்: போலீஸ் அதிகாரிகளை குறி வைத்து நடந்த மிகப்பெரிய ஆன்லைன் மோசடி கண்டறியப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
செப்டம்பர் 15ம் தேதி.. கர்நாடகாவின் சீனியர் ஐபிஎஸ் அதிகாரி ஹரிசேகரன் சைபர் கிரைம் சிஐடி பிரிவில் ஒரு புகாரை பதிவு செய்தார். அதில் தனது பெயரில் போலியாக பேஸ்புக் அக்கவுண்ட் துவங்கப்பட்டுள்ளதுடன் தனது புகைப்படங்கள் பயன்படுத்தப்பட்டு, தனது நண்பர்களிடம் அந்த அக்கவுண்ட் மூலமாக நிதி உதவி கேட்கப்படுவதாகவும் ஹரிசேகரன் தனது புகாரில் தெரிவித்திருந்தார்.
அடுத்த நாளே, மற்றொரு உயர் போலீஸ் அதிகாரியான சிஐடி காவல்துறை துணை கண்காணிப்பாளர் எம்எச் நாக்தே, இதே போன்ற ஒரு புகாரை போலீசார் பதிவுசெய்தனர். சிஐடி பிரிவு டிஎஸ்பி பிரகாஸ் ரத்தோட், அக்டோபர் 5ம் தேதி,பேஸ்புக் மோசடி பற்றி ஹரிஹரன் மாதிரியே ஒரு புகாரை பதிவு செய்தார்.
பல மாநில காவல்துறை
கர்நாடக காவல்துறை உயரதிகாரிகள் மட்டுமல்லாது, தமிழகம், தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களிலும், போலீஸ் அதிகாரிகள் பலரும் இதே போன்ற பிரச்சனையை எதிர்கொண்டுள்ளனர். ஒட்டுமொத்த காவல் துறையையே குறிவைத்து இது போல ஒரு மோசடி நடப்பதை அறிந்ததும் பெரும் பரபரப்பு தொற்றிக்கொண்டது. இந்த புகார்கள் குறித்து விசாரித்த கர்நாடக சிஐடி காவல்துறைக்கு முக்கியமான துப்பு கிடைத்து வழக்கின் தீர்ப்பு காரணமாக அமைந்தது.
சிம் கார்டு டீலர்
இதன்படி, கர்நாடக போலீசார் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த சிம்கார்டு விநியோகஸ்தரான பல்விந்தர் சிங் என்பவரை கைது செய்தனர். இவர் போலியாக ஆதார் அட்டைகளை உருவாக்கி, அதை காட்டி சிம்கார்டுகள் பெற்றுக் கொடுத்துள்ளார். சுமார் 100 சிம்கார்டுகள் இதுபோல உருவாக்கப்பட்டுள்ளன.
மோசடி நடப்பது எப்படி
குய்கர், ஓஎல்எக்ஸ் போன்ற பழைய வாகனங்களை விற்பனை செய்யக்கூடிய இணையதளங்களுக்கு இந்த போலி ஆசாமிகள், தங்களிடமுள்ள பைக் மற்றும் கார் புகைப்படங்களை பதிவேற்றம் செய்வார்களாம். மேலும், காவல்துறை அதிகாரிகள் அல்லது ராணுவ அதிகாரிகளின் புகைப்படத்துடன் ஒரு பயோவை உருவாக்குவார்கள். வாகனங்களை வாங்குவோருக்கு, இது காவல்துறை அதிகாரி அல்லது ராணுவ அதிகாரியின் வாகனம் என்ற நம்பிக்கை பிறக்கும்.
வாகன விற்பனை
வாகனங்களை வாங்க விரும்புவோர் இந்த மோசடிக் கும்பல் போலி ஆதார் கார்டை வைத்து உருவாக்கிய செல்போன் எண்களுக்கு தொடர்பு கொள்ளும்போது, தங்கள் கணக்கிற்கு பணத்தை செலுத்துமாறும், வாகனத்தை வீட்டுக்கே அனுப்பி வைக்கிறேன் என்றும் மோசடி கும்பலைச் சேர்ந்தவர்கள் தெரிவிப்பார்கள்.
வாகனத்தை நேரில் வந்து பார்க்காமல், காவல் அதிகாரியின் வாகனம் அல்லது ராணுவ அதிகாரியின் வாகனம் என்ற நம்பிக்கையில் சிலர் ஏமாந்து போய் இந்த கும்பலின், வங்கி கணக்கிற்கு பணம் செலுத்தி உள்ளனர். ஆனால் அதன்பிறகு பணமும் திரும்ப சென்றது கிடையாது, வாகனமும் சென்றது கிடையாது என்று விசாரணையில் தெரியவந்துள்ளது.
போலி பேஸ்புக் கணக்கு
இதைத் தவிர காவல்துறை அதிகாரிகள் போல பேஸ்புக் கணக்கை உருவாக்கி கொண்டு, அந்த அதிகாரிகளின் தோழமை வட்டத்தில் யார் யார் இருக்கிறார்களோ அவர்களுக்கு பிரண்ட் ரெக்வஸ்ட் கொடுத்து சேர்ந்து கொண்டு, பிறகு தனக்கு அவசரமாக பணம் தேவைப்படுகிறது என்று மெசேஜ் அனுப்பி பணம் பெற்று வந்துள்ளது இந்த கும்பல்.
மக்களே உஷார்
காவல்துறை அதிகாரி தங்களிடம் பணம் கேட்கிறார் என்பதால் சிலர் முன்பின் யோசிக்காமல் பணம் கொடுத்துள்ளனர். அவர்களிடமிருந்து இந்த கும்பல் பணத்தை சுருட்டி உள்ளது. இது போன்ற நூதன மோசடி தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. காவல்துறையை சேர்ந்தவர்கள், அதிலும் உயரதிகாரிகள் புகைப்படத்தை பயன்படுத்தி அச்சமே இல்லாமல் ராஜஸ்தான் கும்பல் மோசடி செய்துள்ளது ஒட்டுமொத்த காவல்துறை வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. எனவே பொதுமக்கள் இப்படியான மெசேஜ்கள் வரும்போது காவல்துறை அதிகாரிகளுடன் தொலைபேசியில்பேசி அதன் உண்மைத் தன்மையை அறிந்து கொள்ள வேண்டியது அவசியம் என்று எச்சரிக்கிறார்கள் தகவல் தொழில்நுட்பத் துறை நிபுணர்கள்.