கொரோனா காலத்திலும் இப்படி ஒரு கொடுமை.. பிளாஸ்மா தானத்தில் நடக்கும் பகீர் மோசடி.. மக்களே உஷார்
பெங்களூர்: கொடுமையிலும் மிகப்பெரிய கொடுமை என்றால் இதுதான். அதுவும் கொரானா பேரிடர் காலத்தில் இதுபோல முறைகேடுகளை செய்ய எப்படித்தான் இவர்களுக்கு மனது வருகிறதோ புரியவில்லை.
கொரோனா நோய் பாதிப்பு தீவிரமாக இருப்பவர்களுக்கு பிளாஸ்மா சிகிச்சை செய்யப்படுகிறது. அதாவது, ஏற்கனவே பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் ரத்தத்தில் இருந்து பிளாஸ்மா பிரித்தெடுக்கப்படுகிறது. கொரோனா வைரசுக்கு எதிராக போரிட்டு வெற்றி அடைந்த அந்த ரத்த செல்கள் நோயாளிக்குச் செலுத்தப் படும் போது அவருக்கும் எதிர்ப்பு சக்தி கிடைக்கும் என்பதுதான் இதிலுள்ள அறிவியல் அடிப்படை.
பெரும்பாலும், கொரோனாவால், மோசமாக உடல்நிலை பாதிக்கப்பட்டவர்களுக்கு பிளாஸ்மா சிகிச்சை செய்யப்படுகிறது. ஆனால் பெங்களூரில் இந்த விஷயத்தில் மனசாட்சி இல்லாமல் ஒரு மோசடி அரங்கேறி வருகிறது.
அதாவது, பிளாஸ்மா சிகிச்சை தேவைப்படும் நோயாளிகளின் உறவினர்களை அணுகும் மோசடிப் பேர்வழிகள், தாங்கள் பிளாஸ்மா தானம் தர தயார் என்று கூறி, அவர்களிடம் பணத்தையும் பெற்றுக் கொண்டு பிறகு தலைமறைவாகி விடுகிறார்களாம்.
"அண்ணா என்னாச்சு".. நிலை குலைந்து விழுந்த ராகுல்.. பதறி போய் ஓடி வந்த பிரியங்கா!
7000 ரூபாய்
மெர்சி மிஷன் என்ற அமைப்பில் தன்னார்வலராக பணியாற்றி வரும் முஹம்மது இஸ்மாயில் என்பவர் இது பற்றி கூறுகையில், தனக்கு தெரிந்த ஒரு குடும்பத்திடம் பிளாஸ்மா தானம் செய்வதாக கூறி ஒருவர் 7000 ரூபாய் மோசடி செய்துள்ளார் என்று பகீர் தகவலை தெரிவித்துள்ளார்.
முன்பின் அறிமுகமில்லாத அந்த நபர், கொரோனா பாதிக்கப்பட்ட நோயாளியின் குடும்பத்தாரை தொலைபேசியில் அழைத்து தன்னால் பிளாஸ்மா தானம் தர முடியும் என்றும் கூகுள் பே, மூலமாக 7000 ரூபாய் தரவேண்டும் என்றும் கேட்டுள்ளார்.
ஏமாற்றம்
இதை நம்பிய அந்த குடும்பமும் பணத்தை செலுத்தியது. ரத்ததானம் செய்ய வருவார் என்று காத்திருந்தவருக்கு ஏமாற்றம் தான் மிஞ்சியது. இதன் பிறகுதான் தாங்கள் ஏமாற்றப்பட்டதை அவர்கள் அறிந்து கொண்டனர். இவ்வாறு அவர் தான் பார்த்த அனுபவத்தை கூறினார்.
சமூக வலைத்தளங்கள்
இதேபோல பெங்களூரில் உள்ள எம்எஸ் ராமையா மருத்துவமனையில் கோலார் பகுதியை சேர்ந்த ஒரு பெண் மற்றும் அவரது குடும்பத்தாருக்கு கொரோனா பாதிப்புக்கான சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அந்த பெண் சீரியசாக இருந்த தனது தந்தைக்கு பிளாஸ்மா தானம் செய்ய யாராவது முன்வர வேண்டும் என்று கேட்டு சமூக வலைத்தளங்கள் வழியாக வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ரோட்டரி கிளப் பெயரை சொல்லி
இதைப் பார்த்த ஒரு நபர் தான் ரோட்டரி கிளப்பை சேர்ந்தவர் என்றும், எனவே மனிதாபிமான அடிப்படையில் தானம் செய்ய முன்வந்து இருப்பதாகவும் இதற்கு மாற்றாக 7 ஆயிரம் ரூபாய் பணம் தர வேண்டும் என்றும் கேட்டுள்ளார். அந்தப் பெண்ணும் பணத்தை ஆன்லைன் மூலமாக செலுத்தி உள்ளார். ஆனால் அதன்பிறகு பிளாஸ்மா தானம் செய்ய அந்த நபர் வரவில்லை.
ஏமாற வேண்டாம்
இதுபோன்ற மோசடிகள் பெங்களூரில் அதிகரித்து வரும் நிலையில் தனி நபர்களை நம்பி ஏமாற வேண்டாம் என்று பாதிக்கப்பட்டோரின் குடும்பத்தாரை தன்னார்வலர்கள் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். ரத்த வங்கி மூலமாக அல்லது மருத்துவமனை மூலமாக பிளாஸ்மா சிகிச்சை மேற்கொள்வது நல்லது. அல்லது ஏமாற்று பேர்வழிகள் இதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்வார்கள்.
ஊக்கத் தொகை
கர்நாடக அரசு உத்தரவுப்படி பிளாஸ்மா தானம் செய்வதற்கு 5 ஆயிரம் ரூபாய் ஊக்கத் தொகையாக வழங்கப்படுகிறது. எனவே தனி நபர்கள் யாரும் இதை நம்பி ஏமாற வேண்டாம் என்பது தான் அரசின் வேண்டுகோள்.