விவசாய சட்டத்திற்கு எதிராக திரளும் விவசாயிகள்.. நாளை மறுநாள் கர்நாடகா பந்த்.. ஆட்டோ, டாக்சி ஓடாது
பெங்களூர்: விவசாய சட்ட மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, கர்நாடக மாநிலம் முழுக்க, வரும் திங்கள்கிழமை பந்த் நடத்துவதற்கு விவசாய அமைப்புகள் அழைப்பு விடுத்துள்ளன.
மத்திய அரசு கொண்டுவந்துள்ள விவசாய சட்டங்கள் மற்றும் கர்நாடக பாஜக அரசு கொண்டு வந்துள்ள நில சீர்திருத்த அவசர சட்டம் ஆகியவற்றிற்கு எதிராக விவசாய அமைப்புகள் கடந்த வெள்ளிக்கிழமை, அதாவது நேற்று மாநிலம் முழுக்க போராட்டம் நடத்தின.
பெங்களூரில் நடைபெற்ற போராட்டத்தின் காரணமாக பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
போராட்டம்
இந்த போராட்டத்திற்கு விவசாய அமைப்புகள் மட்டுமின்றி, ஆம் ஆத்மி, கம்யூனிஸ்ட் உட்பட எதிர்க்கட்சிகளும் ஆதரவு தெரிவித்து வீதிகளில் போராட்டத்தில் குதித்தன. இதனால் பெங்களூர் முழுக்க பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதில் பலரும் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.
அவசர சட்டம்
இந்த நிலையில் மீண்டும் நாளைமறுநாள், திங்கள்கிழமை கர்நாடகா முழுக்க பந்த் நடத்துவதற்கு கர்நாடக விவசாய சங்கங்கள் அறிவித்துள்ளன. கர்நாடக அரசு சமீபத்தில், கர்நாடக நிலசீர்திருத்தம் திருத்தச்சட்டம், கர்நாடகா விவசாய உற்பத்தி சந்தை திருத்த சட்டம் ஆகியவற்றை அவசர சட்ட வடிவில் பிறப்பித்தது.
விவசாய நிலம் வாங்கலாம்
இந்த சட்டத்தில் விவசாய துறை சாராதவர்கள், அவர்கள் எந்த வருவாய் பிரிவினராக இருந்தாலும் விவசாய நிலங்களை வாங்க முடியும் என்று திருத்தம் செய்யப்பட்டுள்ளது. விவசாய நிலங்களை பிறர் வாங்குவது கிரிமினல் குற்றமாக கருதப்பட்ட சட்ட பிரிவு நீக்கப்பட்டுள்ளது.
ஆதரவு
இந்த நிலையில்தான், விவசாயிகளின் போராட்டத்திற்கு, கர்நாடக ஆட்டோ டாக்ஸி சங்கங்கள், பாரத் டிரைவர் யூனியன், ஓலா, டாக்ஸி ஃபார் சூர் உரிமையாளர் மற்றும் டிரைவர் சங்கம், லாரி உரிமையாளர் சங்கம் ஆகியவை 28ஆம் தேதி வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு ஆதரவு அளித்துள்ளன. பெங்களூர் உணவக உரிமையாளர்கள் சங்கமும் ஆதரவு வழங்கி உள்ளது.