ஆமா, ஆட்சி கவிழ்ந்தாச்சி ஓகே.. அதிருப்தி எம்எல்ஏக்கள் கதி என்ன?
Recommended Video
பெங்களூர்: கர்நாடக சபாநாயகர் ரமேஷ் குமார் அதிருப்தி எம்.எல்.ஏ.க்களை தன் முன்பாக ஆஜராக அழைப்புவிடுத்துள்ளார். அவர்களின் தகுதிநீக்கம் தொடர்பாக முடிவெடுக்க வேண்டிய முக்கிய கட்டத்தில் சபாநாயகர் இப்போது உள்ளார்.
கர்நாடகாவில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி அரசு கவிழ்ந்துள்ளது. இந்த நிலையில்தான், ராஜினாமா செய்து ஆட்சி கவிழ்ப்புக்கு வழிகோலிய காங்கிரஸ்-ஜே.டிஎஸ் கூட்டணியை சேர்ந்த மொத்தம் 15 எம்.எல்.ஏ.க்களின் தலைவிதி சபாநாயகர் கைகளில் உள்ளது.
பாஜக தலைமையில் அமையும், புதிய அரசில் அமைச்சர்கள் ஆக வேண்டும் என்று அதில் பலர் விரும்பும் நிலையில், அவர்களின் எதிர்காலத்தை நிர்ணயிக்கப்போகிறார் சபாநாயகர்.
சபாநாயகர் இந்த 15 பேர் அளித்த ராஜினாமாவை ஏற்றுக்கொள்வாரா அல்லது அவர்களை தகுதி நீக்கம் செய்வாரா என்பது பெரிய கேள்வி. அதிருப்தியாளர்கள் ராஜினாமாக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டால், அவர்கள் அடுத்த அரசில் அமைச்சர்களாக சட்டத்தில் இடமுள்ளது.
தகுதி நீக்கம் செய்யப்பட்டால், அவர்கள் அமைச்சர்களாக முடியாது. தற்போதைய சட்டமன்றத்திற்கான இடைத்தேர்தலில் போட்டியிடவும் முடியாது. அவர்கள் அடுத்த சட்டமன்ற பதவி காலத்தில் நடைபெறும் தேர்தலில்தான் போட்டியிடலாம். தகுதி நீக்கம் என்பது நடப்பு சட்டமன்ற சபையில் மீண்டும் உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட முடியாது என்பதை குறிக்கும் சொல்.
எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டால், அவர்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடருவது உறுதி. காங்கிரஸ் மற்றும் மஜத தலைமை வழங்கிய கொறடா உத்தரவுக்கு அவர்கள் கீழ்ப்படியவில்லை என்ற அடிப்படையில் தகுதிநீக்க புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஆனால், உச்சநீதிமன்றத்தின் ஜூலை 17 உத்தரவை மேற்கோள் காட்டி அதிருப்தியாளர்கள் தப்பிக்க பார்ப்பார்கள். அதிருப்தி எம்எல்ஏக்களை சட்டசபைக்கு செல்ல சொல்லி, நிர்பந்திக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் தனது உத்தரவில் தெரிவித்திருந்தது. எனவே இந்த பாயிண்ட்டை அதிருப்தி எம்எல்ஏக்கள் தங்கள் வழக்கிற்கு சாதகமான அம்சமாக முன் வைப்பார்கள்.
ஒரு வேளை, ஜனாதிபதி ஆட்சி கர்நாடகாவில் அமல்படுத்தப்பட்டு, அடுத்த ஆறு மாதங்களில் தேர்தலை சந்திக்க சென்றால், இந்த எம்.எல்.ஏ.க்கள் தேர்தலில் போட்டியிடுவதைத் தடுக்க முடியாது. அமைச்சர்களாகவும் வாய்ப்பு உருவாகும். ஆனால் தேர்தலை சந்திக்க எந்த கட்சியும் தயாராக இல்லை என்பதே கர்நாடக நிலவரம்.