3 குழந்தைகளை கொன்றுவிட்டு தந்தை தற்கொலை.. 2 மாதங்களுக்கு முன் மனைவி தற்கொலை
பெங்களூர்: பெங்களூருவில் 3 குழந்தைகளை கொன்றுவிட்டு தந்தை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.
பெங்களூரு மைகோ லே அவுட் போலீஸ் எல்லைக்குள்பட்ட பகுதியில் வசித்து வந்தவர் ஜனகராஜ் (34). இவருக்கு சரஸ்வதி (13), ஹேமதி (9) ஆகிய இரு மகள்களும், 3 வயதில் ராஜ்குமார் என்ற ஆண் குழந்தையும் இருந்தது.
நேபாளத்தை சேர்ந்த ஜனகராஜ், பெங்களூரில் காவலாளியாக பணியாற்றி வந்தார். நேற்று முன் தினம் அவரது வீட்டுக் கதவு திறக்கப்படாமல் பூட்டியே கிடந்தது.
சந்தேகம்
இதனால் அக்கம்பக்கத்தினர் சந்தேகமடைந்து ஜன்னல் வழியாக பார்த்தனர். அப்போது ஜனகராஜ் அவரது இரு மகள்களும் 3 வயது ஆண் குழந்தையும் தூக்கில் தொங்கியபடி கிடந்தனர். இதுகுறித்து மைகோ லே அவுட் போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீஸார் விரைந்து வந்து ஜனகராஜ், அவரது பிள்ளைகளின் உடல்களை கைப்பற்றி விசாரணை நடத்தினார்கள்.
கொலை
பின்னர் அவர்களது உடல்கள் பிரேச பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. விசாரணையில் ஜனகராஜ் தனது மகள்கள் இருவரையும் மகனையும் தூக்கில் தொங்கவிட்டு கொலை செய்துவிட்டு தானும் தூக்கிட்டுக் கொண்டது தெரியவந்தது.
ஜனகராஜ்
மேலும் கடந்த 2 மாதங்களுக்கு முன்புதான் ஜனகராஜின் மனைவி சாந்தா தேவி தற்கொலை செய்து கொண்டார். மனைவி இறந்த பின்னர் குழந்தைகளை வளர்க்க தெரியாமல் ஜனகராஜ் சிரமப்பட்டதாக தெரிகிறது. இதனால் சிறிது நாட்களாக ஜனகராஜ் மனம் உடைந்து காணப்பட்டார்.
உயிரை மாய்த்தது
இதையடுத்து ஜனகராஜ் பிள்ளைகளை கொன்றுவிட்டு அவரும் உயிரை மாய்த்தது தெரியவந்துள்ளது. இதுகுறித்து மைகோ லே அவுட் போலீஸார் வழக்குப் பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.