ஒரு ட்வீட்டால் வந்த வம்பு.. சோனியா காந்திக்கு எதிராக கர்நாடக போலீஸ் எப்.ஐ.ஆர்
பெங்களூர்: பிரதமரின் PMCARES fund தொடர்பாக மக்களிடம் தவறான கருத்துக்களை, காங்கிரஸ் கட்சியின் சமூக வலைதளப் பக்கங்கள் செய்தி பரப்பியதாக குற்றச்சாட்டின் பெயரில் கர்நாடக மாநிலத்தில், காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பாதிப்பை தொடர்ந்து அதை சமாளிப்பதற்காக பொதுமக்களிடம் இருந்தும், பல்வேறு அமைப்புகளிடமிருந்தும் நிதி பெறும் நோக்கத்தில் PMCARES fund என்ற பெயரில் அறக்கட்டளை ஆரம்பித்தது பிரதமர் அலுவலகம்.
இந்த நிலையில், மே 11ஆம் தேதி காங்கிரஸ் கட்சியின் டுவிட்டர் வலைத்தளத்தில் இந்த நிதி தொடர்பான ஒரு தகவல் ஷேர் செய்யப்பட்டது. இது குறித்து வழக்கறிஞர் பிரவீன் என்பவர் கர்நாடக மாநிலம் ஷிமோகா மாவட்டத்தில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
பொதுமக்களை குழப்பி இந்த பேரிடர் காலத்தில் அரசுக்கு எதிராக சந்தேகங்களை ஏற்படுத்தும் வகையில் இந்த தகவல் இருப்பதாக அவர் குற்றம் சாட்டினார். இந்த புகாரின் பேரில், சோனியா காந்திக்கு எதிராக முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்துள்ளது கர்நாடக காவல்துறை. டுவிட்டர் கணக்கை, சோனியா பராமரிப்பதாக புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசு என்னதான் செய்யுது.. நாளைக்கு ஆலோசிப்போம்.. 18 கட்சிகளுக்கு காங்கிரஸ் அழைப்பு.. திமுக பங்கேற்பு
காங்கிரஸ் குற்றம்சாட்டிய, இந்த நிதியகம் மார்ச் 27ஆம் தேதி பிரதமர் அலுவலகத்தால் தொடங்கப்பட்டது. இந்த அறக்கட்டளைக்கு பிரதமர் தலைவராகும். பாதுகாப்பு துறை அமைச்சர், உள் துறை அமைச்சர் மற்றும் நிதித்துறை அமைச்சர் ஆகியோர் இதன் உறுப்பினர்களாக உள்ளனர்.