சுப்ரீம் கோர்ட்டில் மேலும் 5 அதிருப்தி எம்எல்ஏக்கள்.. கர்நாடக அரசியலில் அடுத்த டிவிஸ்ட்
Recommended Video
பெங்களூர்: தங்கள் ராஜினாமா கடிதங்களையும் விரைவில் சபாநாயகர் அங்கீகரிக்க உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்தி, மேலும் 5 அதிருப்தி எம்எல்ஏக்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
ஏற்கனவே 10 அதிருப்தி எம்எல்ஏக்கள் தொடர்ந்த வழக்கை உச்சநீதிமன்றம் விசாரித்து வருகிறது. நீதிமன்றம் அளித்த உத்தரவையேற்று, 10 பேரும், சபாநாயகரை நேரில் சந்தித்து நேற்று முன்தினம் ராஜினாமா கடிதங்களை அளித்தனர்.
இந்த வழக்கு விசாரணை மீண்டும் நேற்று உச்சநீதிமன்றத்தில் வந்தபோது, சபாநாயகரை குறிப்பிட்ட நாளுக்குள் முடிவுகளை அறிவிக்க நீதிமன்றம் நிர்பந்திக்க முடியாது என சபாநாயகர் தரப்பு வாதம் முன் வைத்தது. இருப்பினும் வரும் செவ்வாய்க்கிழமை வரை 10 எம்எல்ஏக்களை தகுதி நீக்கமும் செய்ய கூடாது, ராஜினாமா கடிதங்கள் மீது முடிவும் எடுக்க கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்டது.
எதற்கெடுத்தாலும் நுழைவுத் தேர்வு என்றால் மாணவர்கள் எப்படி படிப்பார்கள்?.. சூர்யா
இந்த நிலையில்தான், சுதாகர், ரோஷன் பெய்க், எம்டிபி.நாகராஜ், முனிரத்னா மற்றும் ஆனந்த் சிங் ஆகிய 5 பேர் இன்று சுப்ரீம் கோர்ட்டில், வழக்கு தொடர்ந்துள்ளனர். சபாநாயகர் தங்களை தகுதி நீக்கம் செய்துவிட்டால் என்ன செய்வது என்ற அச்சம் இதற்கு காரணமாக இருக்கலாம் என தெரிகிறது.
ஒருபக்கம், நாகராஜை, காங்கிரஸ் தலைவர்கள் சந்தித்து அவரின் முடிவை மாற்ற முயற்சி செய்த நிலையில், மற்றொரு பக்கம், நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த 5 எம்எல்ஏக்கள் பட்டியலில் அவர் பெயரும் உள்ளது குறிப்பிடத்தக்கது.