வெளிநாடுகளுக்கு இணையாக நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்ய சென்ற சந்திரயான் 2.. சபாஷ் இஸ்ரோ!
பெங்களூர்: விஞ்ஞான துறையில் மைல் கல் போல் வெளிநாடுகளுக்கு இணையாக நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்ய சந்திரயான் 2 என்ற விண்கலம் அனுப்பப்பட்டது குறித்த ஒரு பிளாஷ்பேக்...
சந்திரயான் 1 என்ற விண்கலம் நிலவில் தண்ணீர் இருப்பதை கண்டறிந்தது. இதைத் தொடர்ந்து சந்திரயான் 2 என்ற விண்கலத்தை இந்திய விண்வெளி நிறுவனம் (இஸ்ரோ) கடந்த ஜூலை மாதம் 22-ஆம் தேதி செலுத்தியது. இது நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்வதற்காக அனுப்பப்பட்டதாகும்.
இந்த விண்கலத்தில் ஆர்பிட்டர், லேண்டர், ரோவர் ஆகிய அமைப்புகளை கொண்டது. இதில் உள்ள ஆர்பிட்டர் நிலவை சுற்றி வரும். லேண்டரானது நிலவில் மெதுவாக தரையிறங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டது. அவ்வாறு மென்மையான முறையில் தரையிறங்கும் போது லேண்டரில் உள்ள ரோவர் என்ற குட்டி வாகனம் குடுகுடுவென இறங்கி நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்யும் பணியை தொடங்கும் வகையில் புரோகிராம் செய்யப்பட்டிருந்தது.
லேண்டர் தரையிறங்குதல்
இதுவரை நிலவின் தென்துருவத்தில் மென்மையான தரையிறங்கல் மூலம் ரஷ்யா, அமெரிக்கா, சீனா ஆகிய 3 நாடுகள் மட்டுமே வெற்றி பெற்றுள்ளன. இந்த நிலையில் லேண்டர் தரையிறங்கும் நிகழ்ச்சி கடந்த செப்டம்பர் மாதம் 5-ஆம் தேதி நிகழ்ந்தது.
ஆர்பிட்டர் படம்
அப்போது நாடே உற்று நோக்கிக் கொண்டிருந்த வேளையில் நிலவில் தரையிறங்குவதற்கு 500 மீட்டர் உயரத்தில் இருந்த போது இஸ்ரோவுடனான லேண்டரின் இணைப்பு துண்டிக்கப்பட்டுவிட்டது. இதனால் விஞ்ஞானிகள் மனவேதனை அடைந்தனர். இதையடுத்து இரு நாட்கள் கழித்து லேண்டர் சாய்வாக தரையிறங்கியிருந்ததை நிலவை சுற்றி வரும் ஆர்பிட்டர் படம் பிடித்து அனுப்பியது.
விடாமுயற்சி
இதனால் உற்சாகமடைந்த விஞ்ஞானிகள், அன்றைய தினத்திலிருந்து 14 நாட்களுக்குள் லேண்டருடனான தொடர்பை ஏற்படுத்த முடியும் என நம்பிக்கையுடன் அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டனர். இஸ்ரோவுடன் நாசாவும் இணைந்து லேண்டரை தேடியது. ஆனால் விடாமுயற்சி பலனளிக்கவில்லை.
4 ஆவது நாடு
எனினும் தென்துருவத்துக்கு விண்கலத்தை அனுப்பும் முயற்சியில் லேண்டரை கண்டுபிடிக்க முடியாவிட்டாலும் இஸ்ரோ விஞ்ஞானிகளின் இந்த முயற்சி 99 சதவீதம் வெற்றி அடைந்து விட்டதாகவே சொல்லலாம். ஒருவேளை அந்த 1 சதவீதமும் வெற்றி பெற்றிருந்தால் தென்துருவத்தில் தரையிறங்கிய நாடுகளில் இந்தியா 4-ஆவது நாடு என்ற பெருமையை பெற்றிருக்கும்.
வாழ்த்துகள்
இப்போதும் ஒன்றும் குறைந்துவிடவில்லை. தற்போது சந்திரயான் 3 திட்டப்பணிகளில் இஸ்ரோ இறங்கியுள்ளது. இதில் நிலவில் தென் துருவத்தில் சாப்ட் லேண்டிங் மூலம் தரையிறங்குதல் தோல்வி அடையாத மாதிரி வடிவமைக்கப்படும் என இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார். இனி வரும் நாட்களில் இஸ்ரோவின் அனைத்து திட்டங்களும் வெற்றி அடைந்து விஞ்ஞான துறையில் இந்தியா புதிய உயரங்களை எட்டுமே என ஆங்கிலப் புத்தாண்டையொட்டி வாழ்த்துவோம்.