பணமோசடி நபரிடம் ரூ.400 கோடி லஞ்சம் பெற்ற வழக்கு... கர்நாடக முன்னாள் அமைச்சர் ரோஷன் பெய்க் கைது..!
பெங்களூரு: ஐஎம்ஏ பணமோசடி வழக்கில் கர்நாடக முன்னாள் அமைச்சர் ரோஷன் பெய்க் சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பெங்களூரு சிவாஜி நகரில் நகைக்கடை நடத்தி வந்த மன்சூர் கான், கவர்ச்சிக்கரமான அறிவிப்புகளை வெளியிட்டு பொதுமக்களிடம் கோடிக்கணக்கில் பணம் வசூலித்து மோசடியில் ஈடுபட்டார். இந்த விவகாரம் நாடு முழுவதும் கடந்தாண்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
இதனிடையே பொதுமக்களிடம் வசூலித்த ரூ.1,600 கோடியில் ரூ.400 கோடியை ரோஷன் பெய்க்கிடம் லஞ்சமாக கொடுத்ததாக மன்சூர் கான் திடுக்கிடும் தகவலை வெளியிட்டிருந்தார். இதையடுத்து முன்னாள் அமைச்சர் ரோஷன் பெய்க்கிடம் சிபிஐ கடந்த ஓராண்டுக்கும் மேலாக விசாரணை நடத்தி வந்தது.
இந்நிலையில் இந்த வழக்கில் சிபிஐ அதிகாரிகளால் ரோஷன் பெய்க் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் சிவாஜி நகர் தொகுதியில் மிகுந்த செல்வாக்குடன் இருப்பவர். பணமோசடி வழக்கில் இவர் சிக்கிய பின்னரும் இவருக்கான ஆதரவாளர்கள் வட்டம் என்பது இன்னும் அப்படியே இருக்கிறது.
காங்கிரஸ் தலைவர்கள், மக்களுடனான தொடர்பை இழந்து விட்டனர்: குலாம் நபி ஆசாத் பொளேர்
இதில் ட்விஸ்ட் என்னவென்றால், ஐஎம்ஏ பண மோசடி வழக்கில் சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் எனக் கோரியதே ரோஷன் பெய்க் தான். யார் விசாரணை நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்தாரோ அந்த விசாரணை அமைப்பே கைதும் செய்திருக்கிறது. மன்சூர் கானின் குற்றச்சாட்டை ஆரம்பம் முதலே மறுத்து வரும் ரோஷன் பெய்க், அரசியல் காரணங்களுக்காக தன் மீது பழி சுமத்தப்படுவதாக கூறி வந்தார்.
பலமுறை சட்ட நுனுக்கமாக செயல்பட்டு கைது நடவடிக்கையில் இருந்து தப்பித்து வந்த ரோஷன் பெய்க்கை இந்த முறை சிபிஐ விடாப்பிடியாக கைது செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.