ரத்தம் கொதிக்குது.. மகாத்மா காந்தியின் சுதந்திர போராட்டமே ஒரு நாடகம்.. பாஜக எம்பி அனந்தகுமார் ஹெக்டே
பெங்களூரு: மகாத்மா காந்தி நடத்திய சுதந்திர போராட்டமே ஒரு நாடகம் தான் என கர்நாடகாவைச் சேர்ந்த பாஜக எம்பி அனந்தகுமார் ஹெக்டே சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார்.
கர்நாடகாவைச் சேர்ந்த பாஜக எம்பி அனந்தகுமார் ஹெக்டே இவர் கடந்த ஐந்து ஆண்டுகள் மத்திய அமைச்சராக பொறுப்பு வகித்தவர் ஆவார். மீண்டும் பாஜக வெற்றி பெற்ற பின் அனந்தகுமார் ஹெக்டேவுக்கு அமைச்சரவையில் இடம் வழங்கப்படவில்லை.
இவர் தேசதந்தை மகாத்மா காந்தி குறித்து ஏற்கனவே சர்ச்சைக்குரிய வகையில் டுவிட்டரில் கருத்து பதிவிட்டு பின்னர் நான் அப்படி பதிவிடவே இல்லை. என் டுவிட்டரை யாரோ ஹேக்கிங் செய்துவிட்டார்கள் என்று கடந்த ஆண்டு கூறினார்.
இந்நிலையில் பெங்களூருவில் சனிக்கிழமை நடந்த பொதுக்கூட்ட நிகழ்ச்சி ஒன்றில் அனந்தகுமார் ஹெக்டே கலந்து கொண்டு பேசினார், அப்போது அவர் மகாத்மா காந்தியின் சுதந்திர போராட்டம் ஒரு நாடகம். ஆங்கிலேயர்கள் விரக்தியால் சுதந்திரம் வழங்கினார்கள். எனவே சுதந்திரத்தை போராட்ட வரலாறை படிக்கும் போதும், இப்படிப்பட்டவர்களை எப்படி இந்தியாவில் மகாத்மா என்ற அழைக்கிறார்கள் என்றும் என் ரத்தம் கொதிக்கிறது.
ஆங்கிலேயேர்களின் ஆதரவுடனே இத்தகைய போராட்டங்கள் நடந்தது. தலைவர்கள் என கூறிக்கொள்ளும் இத்தகைய நபர்கள் ஒருமுறை கூட போலீசாரால் தாக்கப்படவில்லை. இது ஒரு நேர்மையான போராட்டம் இல்லை" இவ்வாறு கூறினார்.
அனந்தகுமார் ஹெக்டேவின் இந்த கருத்து கடும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதனால் அவர் மீது கடும் கோபத்தில் இருக்கும் பாஜக மேலிடம், அவரை உடனே நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்குமாறு கேட்டுள்ளது. இதனிடையே காங்கிரஸ் கட்சி இதற்கு பதிலடி கொடுத்துள்ளது. மகாத்மா காந்தியின் போராட்டம் குறித்து எந்த நற்சான்று தேவையில்லை என்று விளக்கம் அளித்துள்ளது.