கன்னடம் கத்துக்கோங்க.. அதட்டும் போலீஸ்.. தெறித்து ஓடும் தமிழ் வாகன ஓட்டிகள்.. பெங்களூர் ஊரடங்கில்
பெங்களூர்: பெங்களூரில் இன்று முதல் அடுத்த ஒரு வாரத்துக்கு முழு ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வந்துள்ளது. உண்மையை சொல்லப்போனால் நேற்று இரவு 8 மணி முதலே இந்த ஊரடங்கு அமலுக்கு வந்துவிட்டது.
ஜூலை 22ஆம் தேதி அதிகாலை 5 மணி வரை பெங்களூரு நகரில் முழு ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும்.
மார்ச் 24ஆம் தேதி முதல், எவ்வாறு முதல், ஊரடங்கு உத்தரவு கடைபிடிக்கப்பட்டதோ, அதுபோன்ற கெடுபிடிகளுடன் இந்த ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வந்துள்ளது.
'ட்ரிபிள் லாக்டவுன்..' கர்நாடக அரசு கையில் எடுக்கும் ஆயுதம்.. பெங்களூர் தனித் தீவாகும் வாய்ப்பு
ஆவணம் தேவை
ஒவ்வொரு ஏரியாக்களிலும், அங்குள்ள மக்கள் மட்டுமே நடமாடுவதற்கு அனுமதிக்கப்படுகிறார்கள். மற்ற இடங்களில் பேரிகேட் போட்டு போலீசார் தடுத்து நிறுத்தி வருகிறார்கள். அலுவலகம் செல்லவேண்டும் என்றால் கூட உரிய ஆவணம் அல்லது அடையாள அட்டையை காண்பித்துதான் செல்ல வேண்டும். பெரும்பாலான அலுவலகங்கள் வீட்டிலிருந்து பணியாற்றுவதற்கு அனுமதித்துள்ளன.
கடைகள் மூடல்
பைக் போன்ற வாகனங்களில் அதே ஏரியாக்கள் மக்கள் சுற்றி வருகிறார்கள். நடந்துதான் செல்ல வேண்டும் என்று யாரையும் கட்டாயப்படுத்தவில்லை. பகல் 12 மணிவரை கடைகள் திறந்து இருக்கலாம். அதற்கு பிறகு அத்தியாவசிய பொருட்களை விற்பனை செய்யக்கூடிய கடைகள் கூட மூடி இருக்கத்தான் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மருந்தகங்களுக்கு மட்டும் இதில் விதிவிலக்கு உண்டு.
போலீசார் கெடுபிடி
தெற்கு பெங்களூர் பகுதியில் நாம் இன்று காலை கண்ட ஒரு காட்சி இதுதான். ஒரு வாலிபர் பைக்கில் அவசரமாக சென்று கொண்டிருக்கிறார். அப்போது அவரை ஒரு பெண் காவலர் உட்பட நான்கைந்து போலீசார் வழிமறித்து நிறுத்தினர். அந்த நபர், "நான் அவசரமாக வேலைக்கு செல்கிறேன்" என்று தமிழில் பேசுகிறார். 'எங்களுக்கு தமிழ் தெரியாது.. கன்னடம் அல்லது ஆங்கிலத்தில் அல்லது ஹிந்தியில் சொல்லுங்களேன்' என்று பதில் வரும் என எதிர்பார்த்தால் ஏமாற்றமே.
பைக்கில் செல்ல கன்னடம் கற்கனுமாம்
ஆண் போலீசார் அமைதியாக நின்றிருந்தனர். ஏனெனில் அவர்களுக்கு தமிழ் புரியக்கூடிய ஒரு மொழிதான். திராவிட மொழி, சகோதர மொழி என்பதால் பேச முடியாவிட்டாலும், கன்னடர்கள், தமிழை புரிந்து கொள்வார்கள். ஆனால் "முதலில் கன்னடம் கற்றுக்கொள்" என்று அதிகாரத் தோரணையில் அந்த பெண் கான்ஸ்டபிள், தமிழ் வாலிபரிடம் கூறியதை பார்த்து, அக்கம் பக்கம் நின்ற சக வாகன ஓட்டிகளே அதிர்ந்து போயினர்.
கன்னடம் கற்பதா கட்டாயம்
ஊரடங்கு உத்தரவை மீறி வாகனத்தில் சென்றால், அதை தடுத்து நிறுத்தி, அபராதம் செலுத்துவது காவல்துறையின் பணியா? அல்லது வந்தவர் தமிழர் என்பதற்காக கன்னட வகுப்புக்கு அனுப்பி அவர்களிடம், கன்னடம் கற்றேயாகவேண்டும் என்று கட்டாயப்படுத்துவது காவல்துறையின் கடமையா? என்ற கேள்வி அங்கிருந்த அனைவருக்கும் எழுந்தது.
தமிழகம் அருமை
தமிழகத்தில் ஒரு கன்னடரோ, அல்லது தெலுங்கரோ, இந்தி பேசும் நபரோ வந்து பேசினால், நீ தமிழைக் கற்றுக்கொண்டு பேசு என்று நாம் சொல்லப் போவது கிடையாது. ஏனெனில், அவர்கள் கற்றுக் கொண்டுதான், உலகின் மூத்த மொழியான, செந்தமிழான, தமிழ் மொழியை வாழ வைக்க வேண்டும் என்ற அவசியம் நமக்கு கிடையாது. அவர்கள் என்ன பேசுகிறார்கள் என்பதை புரிய முயற்சி செய்து, இணைப்பு மொழியான ஆங்கிலத்தில் பதில் அளிப்பதற்குத்தான் நாம் விரும்புவோம். அதுதான் மனித நேயம். இதை அண்டை மாநிலங்கள், குறிப்பாக கர்நாடகம் உணருமா என்பது கேள்விக்குறிதான்.